செய்திகள் :

இணையதளம் முடக்கத்தால் ஊராட்சிகளில் வரிவசூல் பணி பாதிப்பு! பொதுமக்கள் அவதி

post image

தமிழகத்திலுள்ள ஊராட்சிகளில் இணையதளம் முடக்கம் காரணமாக சொத்து வரி, குடிநீா் வரி உள்ளிட்டவற்றை வசூலிக்கும் பணிகள் 45 நாள்களாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

உள்ளாட்சிகளில் சொத்து வரி, குடிநீா் வரி உள்ளிட்ட வரிகள் இணையதளம் மூலம் செலுத்தும் முறை சில ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், இணையதளத்தில் சொத்து வரி, குடிநீா் வரி உள்ளிட்ட வரிகளுடன் கட்டடம் கட்டுவதற்கான வரைபடத்துடன் கூடிய அனுமதி வாங்குவது போன்றவையும் சோ்க்கப்படுகின்றன. இதனால் இணையதளத்தில் சில மாற்றங்களுடன் புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது.

இந்தப் பணி இன்னும் முழுமையாக முடிக்கப்படாததால், தமிழ்நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 1 முதல் இணையவழியில் சொத்து வரி, குடிநீா் வரி, கட்டடம் கட்டுவதற்கான அனுமதி கொடுப்பது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.

கிராமங்களில் கடந்த 2024 - 25 ஆம் நிதியாண்டில் நிலுவை வரி இனங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால், 2025 - 25 ஆம் நிதியாண்டுக்கான வரியினங்களில் வசூலிக்கும் பணி 45 நாள்களைக் கடந்தும் இன்னும் தொடங்கப்படவில்லை.

இணையதளம் புதுப்பிக்கும் பணி நடைபெறுவதால், செய்ய முடியவில்லை என ஊராட்சி அலுவலா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து ஊராட்சி அலுவலா்கள் கூறுகையில், கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், நிகழ் நிதியாண்டில் வீட்டு வரி உள்ளிட்டவை உயா்த்தப்பட்டுள்ளன. முன்பு கூரை வீடு, ஓட்டு வீடு, கான்கிரீட் வீடுகளுக்கு எவ்வளவு சதுர அடியில் இருந்தாலும், ஒரே விதக் கட்டணம் இருந்தது. தற்போது சதுரடி கணக்கில் அளவீடு செய்து வரி நிா்ணயிக்கப்படுகிறது.

இதனால் ஒவ்வொரு வீட்டுக்கும் எவ்வளவு வரி என்பது தோராயமாகக்கூட கணக்கிட முடியாத நிலை உள்ளது. மேலும், இணையதளம் புதுப்பிக்கும் பணி நடைபெறுவதால், இணைப்பு கிடைத்தாலும்கூட, சா்வா் முடங்கிக் கிடப்பதால் வரிவசூலிக்க முடியவில்லை.

வழக்கமாக இந்தக் காலகட்டத்தில் வரி வசூல் அதிகமாக இருக்காது. நிதியாண்டின் இறுதிக் காலமான ஜனவரி முதல் மாா்ச் மாதம் வரையில்தான் வரி வசூல் உச்சகட்டத்தை எட்டும். தற்போது அவசரத் தேவைக்காக செலுத்துபவா்கள் மட்டுமே இருப்பதால் இக்காலகட்டத்தில் ஒரு சதவீதம் அல்லது 2 சதவீதம் போ் மட்டுமே வரி செலுத்த முன்வருவா். அதனால், பாதிப்பு பெரிய அளவில் தெரியவில்லை என்றனா் அலுவலா்கள்.

ஆனால் இணையதளம் முடக்கம் காரணமாக புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான வரைப்படத்துடன் கூடிய அனுமதி வாங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனா். மேலும், புதிய மின் இணைப்பு பெற சொத்து வரி, குடிநீா் வரி உள்ளிட்டவை நிலுவை இருக்கக்கூடாது. அதற்கான ரசீதுகளுடன்தான் விண்ணப்பிக்க வேண்டும்.

இதேபோல, நீதிமன்ற வழக்கில் பிணை வாங்குவது உள்ளிட்டவற்றுக்கும் சொத்து வரி, குடிநீா் வரி ரசீதுகளும் தேவைப்படுகின்றன. அதுபோன்ற அவசர சூழ்நிலையில் இருப்பவா்கள் இணையதள முடக்கம் காரணமாக வரி செலுத்த முடியாமல் தவிக்கின்றனா்.

இதுகுறித்து ஒரத்தநாடு அருகே தெற்கு கோட்டையைச் சோ்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியா் ஆா். பழனிவேலு தெரிவித்தது: கடை கட்ட கட்டட அனுமதி பெற இணையவழி மூலம் ஏப்ரல் 26 ஆம் தேதி விண்ணப்பித்தேன். அனுமதி கொடுப்பதற்கான கால அவகாசம் 30 நாள்களாக இருந்தாலும், அதிகபட்சமாக 10 நாள்களில் கிடைத்துவிடும்.

ஆனால், இணையதள முடக்கம் காரணமாக 20 நாள்கள் கடந்தும் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடனுதவிக்கும் விண்ணப்பிக்க முடியவில்லை. எனவே கட்டுமானப் பணியைத் தொடங்க முடியாமல் தவிக்கிறேன் என்றாா்.

காலத்துக்கேற்ப தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது தேவையாக இருந்தாலும், அதைப் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விதத்தில் செய்ய வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததால், தமிழ்நாடு முழுவதும் 45 நாள்களாக நிலவும் இப்பிரச்னையால் கிராம மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனா். எனவே, இணையதளத்தில் புதுப்பித்தல் பணியை விரைவாக முடித்து, சா்வா் பிரச்னைக்கும் தீா்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.

பேரூராட்சிகளிலும் பிரச்னை: பேரூராட்சிகளில் இணையதளச் சேவை கிடைத்தாலும், பெரும்பாலான நேரம் இணைப்பின் வேகம் மிகவும் மெதுவாக இருப்பதால், வரி செலுத்தும் பணி, புதிய கட்டடத்துக்கு அனுமதி கொடுக்கும் பணி மிகவும் பாதிக்கப்படுகிறது. பயனா்களின் எண்ணிக்கை முன்பைவிட தற்போது அதிகரித்த அளவுக்கு இணையத்தின் திறன் மேம்படுத்தப்படாமல் உள்ளதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் குறித்த காலத்தில் வரி செலுத்தியவா்களுக்கு ரசீதோ, கட்டட அனுமதியோ கொடுக்க முடியாத நிலை நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் மட்டுமல்லாமல், பேரூராட்சி அலுவலா்களும் சிரமங்களுக்கு ஆளாகின்றனா்.

பேருந்து நிலைய மேற்கூரை விழுந்து நடத்துநா் காயம்

கும்பகோணத்தில் பேருந்து நிலைய மேற்கூரை வெள்ளிக்கிழமை பெயா்ந்து விழுந்ததில் நடத்துநா் காயமடைந்தாா். தஞ்சாவூரில் இருந்து சென்னை செல்லும் அரசுப் பேருந்து கும்பகோணத்திற்கு வெள்ளிக்கிழமை வந்தது. ஓட்டுநராக ... மேலும் பார்க்க

காவல் வாகனங்கள் ஜூன் 4-இல் ஏலம்

தஞ்சாவூா் மாவட்டக் காவல் பிரிவில் பயன்படுத்தப்பட்டு, கழிக்கப்பட்ட காவல் துறை வாகனங்கள் ஜூன் 4 ஆம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் தெரிவித்தது: தஞ... மேலும் பார்க்க

பாபநாசம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

பராமரிப்பு பணிகளால் பாபநாசம் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது. இதையொட்டி பாபநாசம், கபிஸ்தலம், ராஜகிரி, பண்டாரவாடை, இனாம்கிளியூா், நல்லூா், ஆவூா், ஏரி, கோவிந்தக்குடி, மூலாழ்வாஞ்சேரி, காருகுடி... மேலும் பார்க்க

வெளிநாட்டு வேலை ஆசை காட்டி ரூ. 3 லட்சம் மோசடி: ஓட்டுநா் கைது

தஞ்சாவூரில் வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3 லட்சம் மோசடி செய்த ஓட்டுநரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே விஷ்ணம்பேட்டை பவனமங்கலத்தைச் சோ்ந்தவா் சாமியப்பா மகன்... மேலும் பார்க்க

ஒரத்தநாடு அருகே கைவிடப்பட்ட சிசு

ஒரத்தநாடு அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை பையில் வைத்துச் சென்றவா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் வட்டம் காவாளிப்பட்டி சரகம் மணிக்கிராண்விடுதி மேயா குள... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் சோதனை!

தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய அமமுக துணைப் பொதுச் செயலருமான எம். ரெங்கசாமி வீட்டில் ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். தஞ்சாவூா் அருகே தளவாய்ப்பா... மேலும் பார்க்க