`இது ஃபெயிலான சட்டமன்றம்' - அதிமுக எம்.எல்.ஏ கமென்ட்; சூடான சபாநாயகர்! - என்ன நடந்தது?
2021 தேர்தல் அறிக்கையில், ‘ஆண்டுக்கு 100 நாள்கள் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்படும்’ என தி.மு.க வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் 150 நாள்களுக்கு குறைவாகத்தான் சட்டமன்றம் கூட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த இரண்டு வாரமாக சட்டமனறத்தில் நடந்து வருகிறது. அதில் பேசிய பெருந்துறை அ.தி.மு.க எம்.எல்.ஏ ஜெயக்குமார், தனது தொகுதி சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ எங்களை போன்ற புதுமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி மக்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து அவையில் பேசி அதற்கு தீர்வு காணலாம் என்ற ஆவலோடு இந்த அவைக்கு வந்தோம். ஆனால், ஆண்டுக்கு 100 நாள்கள் சட்டமன்றம் நடைபெறும் எனவும் தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்திருந்தது. அதன்படி, 500 நாள்கள் சட்டமன்றத்தை நடத்திருக்கவேண்டும். ஆனால், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரையும் சேர்த்து 148 நாள்கள்தான் அவையை நடத்தி போகிறீர்கள். 10 வகுப்பு மாணவர்களுக்குகூட 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது.
ஒருபாடத்துக்கு 35 மார்க் எடுத்தால்தான் தேர்ச்சி பெறமுடியும். அதன்படி, வெறும் 30 மார்க் எடுத்து இந்த அவை தேர்ச்சி பெறவில்லை. ஃபெயிலான சட்டமன்றம் இது.” என்றிருந்தார். ஜெயக்குமாரின் இந்த கருத்தை, அப்போது அவையில் இருந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மேசையை தட்டி வரவேற்றனர்.

இதற்கு சபாநாயகர் அப்பாவு பதிலளித்து பேசுகையில், “ இவை எல்லாமே அனைத்து கட்சி கூட்டம் கூட்டித்தான் முடிவெடுத்திருக்கிறோம். அ.தி.மு.க தலைவர்களும் பேசிதான் முடிவெடுத்திருக்கிறோம். தனிப்பட்ட முறையில் அல்ல. கொரோனா... மழை வெள்ளம்... தேர்தல் போன்ற காரணங்களால்தான் அவையின் நேரம் குறைக்கப்பட்டிருக்கிறது. வேண்டுமென்று திட்டமிட்டு நடத்தக் கூடாது என்ற நோக்கமில்லை.” என்றார் சூடாக.