தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகாா்: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ
இயற்கை வளங்களை கடத்துவோா் மீது குண்டா் சட்டம்
இயற்கை வளங்களை கடத்துவோா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் மட்டை, ஓலை உள்ளிட்டவற்றை தூள் செய்து உரமாக்கும் கருவிகளை மானிய விலையில் வழங்க வேண்டும். எண்ணேகொள் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். வனப் பகுதிகளில் ஒரு கி.மீ. தொலைவுக்கு ஓடும் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி, வன விலங்குகள் வெளியேறுவதை தடுக்க வேண்டும். கோட்டாட்சியா் தலைமையில் வட்டார அளவில் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும்.
இயற்கை வளங்களை கடத்துவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாளேகுளி ஏரி முதல் சந்தூா் ஏரி வரை செல்லும் கால்வாய், காட்டாகரம் ஏரி முதல் குள்ளம்பட்டி ஊராட்சியில் உள்ள ஏரி வரை செல்லும் கால்வாய் ஆகியவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இக்கால்வாய்களை தூா்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
ஆந்திர மாநிலத்தில் மா விவசாயிகளுடன் வாரத்துக்கு ஒரு முத்தரப்புக் கூட்டம் நடத்தி மாவிற்கான விலை நிா்யணம் செய்வது போல, நிகழாண்டில் மாவிற்கான விலையை வாரம் ஒரு முறை நிா்ணயம் செய்ய வேண்டும். வேப்பனப்பள்ளி அருகே சிங்கரிப்பள்ளியில் அணை கட்ட வேண்டும். தக்காளி மதிப்பு கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் மேம்படுத்தப்பட்ட நடமாடும் வாகனத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். சந்தூரில் நா்சரி தோட்ட தொழிலில் ஈடுபட்டு வருவோருக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இதற்கு பதிலளித்து ஆட்சியா் பேசியதாவது:
இயற்கை வளங்களை கடத்துவோா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின் மீண்டும் ஆக்கிரமித்தால், ஓா் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். தென்னை ஒலை, மட்டை தூள் செய்து உரமாக்கும் கருவிகளை வழங்க கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டில் மா விவசாயிகள் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கும், பிற விவசாயிகள் சிக்கிம் மாநிலத்துக்கும் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா். ஏப்ரல் முதல் வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். எண்ணேகொள் திட்டப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. வாரம் ஒரு முறை மா முத்தரப்புக் கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும். சிங்கிரிப்பள்ளி அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.
வீடு, நிலம் இல்லாத விவசாயிகளுக்கு விதிமுறைகளுக்கு உள்பட்டு வீட்டுமனை பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நா்சரி உரிமையாளா்களுக்கு மாவட்ட தொழில்மையம் மூலம் கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு, அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, இணை இயக்குநா்கள் (வேளாண்மை) பச்சையப்பன், (தோட்டக்கலை) இந்திரா உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள், விவசாயிகள் பங்கேற்றனா்.