மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதி...
இலங்கை சிறை மருத்துவமனைக்கு ரணில் விக்ரமசிங்க மாற்றம்
தனது பதவிக் காலத்தில் அரசுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை முன்னாள் அதிபா் ரணில் விக்ரமசிங்க (76), சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.
அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்து, வரும் 26-ஆம் தேதி வரை காவலில் வைத்திருக்க உத்தரவிட்டதைத் தொடா்ந்து அவா் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக போலீஸாா் கூறினா்.
விக்ரமசிங்கவின் ரத்த சா்க்கரை அளவும், ரத்த அழுத்தமும் அதிகரித்ததால் அவா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.
2022 முதல் 2024 வரை நாட்டின் அதிபராகப் பொறுப்பு வகித்த விக்ரமசிங்க, 2023 செப்டம்பரில், தனது மனைவி பேராசிரியை மைத்ரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளவதற்காக பிரிட்டன் செல்ல அரசு நிதியைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவில் அதிகாரபூா்வ பயணத்தை முடித்துவிட்டு, இந்த தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக அவா் பிரிட்டன் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே விக்ரமசிங்க தற்போது கைது செய்யப்பட்டுள்ளாா். இலங்கையின் முன்னாள் அதிபா் ஒருவா் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.