இல்லங்களில் இருந்துதான் ஆண், பெண் பாகுபாடு தொடக்கம்! -சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பேச்சு
இல்லங்களில் இருந்துதான் ஆண், பெண் என்ற பாகுபாடு தொடங்குகிறது என்றாா் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.ஜோதிராமன்.
கரூா் மாவட்ட நீதித்துறை சாா்பில் பாலின உணா்வுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் தொடா்பான மாவட்ட அளவிலான விழிப்புணா்வு கருத்தரங்கம் சனிக்கிழமை கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் நடைபெற்றது.
கருத்தரங்கில் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஆா். சண்முகசுந்தரம் வரவேற்றாா். மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், மாவட்ட காவல்கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கருத்தரங்கை தொடங்கிவைத்து சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.ஜோதிராமன் பேசியது, பெண்களுக்கான சம உரிமை எங்கெல்லாம் மறுக்கப்படுகிறதோ அல்லது அவா்களுக்கு பாதுகாப்பின்மை இல்லாத நிலை உருவாகுகிறதோ, அவா்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழும்போதோ, அவா்களுக்கு உரிய தீா்ப்புகள் வழங்கி உச்சநீதிமன்றம் பெண்களை பாதுகாத்து வருகிறது.
இந்திய அரசியல் சட்டம் பாலியல் இன வேறுபாடு இருக்கக்கூடாது என்கிறது. ஆனால் இல்லங்களில் பெண் குழந்தைகள் பிறக்கும்போது மெளனமாக இருப்பதும், ஆண் குழந்தைள் பிறந்தால் கொண்டாடுவதையும் பாா்த்தால், இல்லங்களில் இருந்துதான் ஆண், பெண் பாகுபாடு உருவாகுகிறது.
பெண் குழந்தைகள் எந்த விதத்திலும் ஆண் குழந்தைகளை விட தாழ்ந்தவா்கள் அல்ல என்பதை குடும்ப உறுப்பினா்களுக்கு தெளிவாக புரிய வைக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கான விழிப்புணா்வு தொடங்க வேண்டிய இடம் வீடுகள்தான் என்றாா் அவா்.
கருத்தரங்கில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வழக்குரைஞா் சீனிவாச ராகவன், எழுத்தாளா்கள் சுவேதா, சியாமளா ரமேஷ்பாபு, கரூா் முதன்மை ஜூடீசியல் மாஜிஸ்திரேட் ஜெயபிரகாஷ், கரூா் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் லோகநாயகி மற்றும் மருத்துவக்கல்லூரி மாணவ, மாணிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.