பலூசிஸ்தானில் அரசுக்கு எதிராக செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை: முதல்வர்
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் அரசுக்கு எதிராக செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலூசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக செயல்படும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அம்மாகாண முதல்வர் மிர் சர்ஃபராஸ் புக்தி உத்தரவிட்டுள்ளார்.
அம்மாகாண உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மிர் சர்ஃபராஸ் புக்தி மேற்கொண்ட உயர்நிலை அலோசனைக் கூட்டத்தில் அரசின் செயல்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள மண்டல மற்றும் துணை ஆணையர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
மேலும், அவர் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை குறைத்து மதிப்பிட அனுமதிக்கமாட்டார்கள் எனவும் மீறுபவர்கள் மீது அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
மக்கள் போராட்டம்!
முன்னதாக, பலூசிஸ்தான் தலைநகர் குவேட்டாவில் நடைபெற்ற போராட்டத்தில் 3 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பலூச் யாக்ஜெஹ்தி ஆணையம் (பி.வொய்.சி.) எனும் மனித உரிமை அமைப்பின் தலைவரான மஹராங் பலூச் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மஹ்ரங் பலூச் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பலூசிஸ்தான் முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கடந்த மார்ச் 23 அன்று துர்பாத், மஸ்துங், கலாத், கஹாரன், சாகை மற்றும் பஞ்குர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இரண்டாவது நாளாக கடையடைப்பு போராட்டம் கடைபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, முதல்வருடனான அலோசனைக் கூட்டத்தில் பலூசிஸ்தானின் சட்டம் ஒழுங்கு குறித்து அதிகாரிகள் விரிவான தகவல்கள் வழங்கினர்.
இதுகுறித்து, முதல்வர் கூறுகையில், மாகாணத்தின் பாதுகாப்பை உறுதி செய்து மாநில அதிகாரத்தை பாதுகாப்பதே முக்கிய கடமையெனவும் அங்குள்ள எந்தவொரு சாலையும் முடக்கப்பட அனுமதிக்கப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பலூசிஸ்தானின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பாகிஸ்தானின் தேசிய கீதம் பாடப்படுவதையும் அந்நாட்டு கொடி ஏற்றப்படுவதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க: யேமன்: ஹவுதி படைகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்! 2 பேர் பலி!