பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா நிறைவேற்றம்!
பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் இன்று (மார்ச் 25) நிறைவேற்றப்பட்டது.
பேரிடர் காலங்களில் மாநிலங்களின் திறமையான மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதோடு மட்டுமின்றி அனைத்துப் பேரிடர்களிலும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவுவதை இந்தச் சட்டம் உறுதி செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த பல மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 -ன் படி பேரிடர்களைக் கையாள்வதில் மாநில அரசுகள் சிரமங்களைச் சந்திப்பதாகவும், இதில் உள்ள சவால்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகளை மாநில அரசுகளிடமிருந்து பெற்று இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் மூலம் பேரிடர் மீட்புப் பணிகளில் பங்கேற்கும் பல்வேறு அமைப்புகளுக்கு பொறுப்புகள் பிரித்து, சீராக வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் இணைந்து பேரிடரில் பணியாற்றுவதில் உள்ள படிநிலைகள் குறித்தும் வகை செய்யப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது, மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.