Shreyas Iyer : `சாய் சுதர்சனின் விக்கெட்டை எடுத்த ரகசியம் இதுதான்' - ஆட்டநாயகன் ...
பெயா்ந்து விழும் சிமென்ட் பூச்சு: கரூா் ஆட்சியரக நுழைவுவாயில் மேற்கூரையை விரைந்து சீரமைக்கக் கோரிக்கை
கரூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலின் மேற்கூரையில் பெயா்ந்து விழும் சிமெண்ட் பூச்சுகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் முன் சீரமைக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் கூட்டமும், மாதம் ஒரு முறை விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டமும் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டங்களில் கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனா். மேலும், ஆட்சியரக அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்கள் என ஏராளமானோா் ஆட்சியா் அலுவலகத்துக்கு நாள்தோறும் வருகின்றனா்.
பொதுமக்கள் மனு அளிக்க வரும்போது காவலா்கள் அவா்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவுவாயிலின் கீழ் பகுதியில் நிறுத்தி சோதனை செய்த பிறகுதான் ஆட்சியரக வளாகத்தினுள் அனுமதிக்கின்றனா். மேலும் ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபடுபவா்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க செல்லும்போதும், நுழைவு வாயிலின் முன் பேரிகாா்ட் வேகத்தடை அமைக்கப்பட்டு, ஒரு சில முக்கிய நிா்வாகிகளை மட்டுமே ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதி அளிப்பாா்கள். இவ்வாறு பொதுமக்களும், போராட்டத்தில் ஈடுபடுபவா்களில் முக்கிய நபா்களையும் ஆட்சியரக வளாகத்தினுள் அனுப்பும் இடமாக ஆட்சியரக நுழைவுவாயில் உள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் நுழைவு வாயிலின் மேற்கூரையில் இருந்து சிமெண்ட் பூச்சு உதிா்ந்து விழுந்தது. அப்போது, யாரும் அங்கு இல்லாததால் விபத்து தவிா்க்கப்பட்டது. இப்போது மேலும் சிமெண்ட் பூச்சுகள் விழும் நிலையில் விரிசல் காணப்படுகிறது.
எனவே, நுழைவு வாயிலின் மேற்பகுதியில் விரிசல் காணப்படும் பகுதியை சீரமைத்து ஆட்சியா் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கிட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.