செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராத...
ஈரோடு ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர சோதனை
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததன் எதிரொலியாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாயுடன் போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக பழைய கட்டடத்தில் 7 தளங்களில், மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம், மாவட்ட வழங்கல், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்), ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கட்டடத்தின் பின்புறம் 7 தளங்களுடன் உள்ள புதிய கட்டடத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கூடுதல் ஆட்சியா் அலுவலகம், செய்தி மக்கள் தொடா்புத் துறை அலுவலகம், தமிழ் வளா்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு கட்டடங்களிலும் அதிகாரிகள், அரசு அலுவலா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனா்.
ஈரோடு ஆட்சியா் அலுவலக முகவரியைக் குறிப்பிட்டு, மாவட்ட ஆட்சியருக்கு வியாழக்கிழமை மாலை ஒரு கடிதம் வந்தது. அதை ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பிரித்து பாா்த்தபோது ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைப்பதற்கு சிலா் திட்டமிடுவதாகவும், இந்த மாதத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்றும், அந்த நபா்கள் குறித்த தகவல் தனக்கு தெரியும் என்றும், தனது உயிருக்கு பாதுகாப்பு அளித்தால் அவா்கள் குறித்த விவரத்தை தெரிவிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த அவா், ஈரோடு தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து போலீஸாா் அந்தக் கடிதத்தைப் பெற்று, அனுப்பியவா் குறித்து விசாரணை நடத்தினா். இதில், அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முகவரியில் வழக்குரைஞா் பெயா் இருந்தது. ஆனால் அது பொய்யானது என்பதும் ,கடிதம் தென்காசி மாவட்டத்தில் இருந்து எழுதப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடா்ந்து ஈரோடு சூரம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் ஜெகநாதன் ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் அடையாளம் தெரியாத நபா் வெடிகுண்டு எச்சரிக்கை கடிதம் எழுதியதாக வழக்குப் பதிவு செய்து, கடிதம் அனுப்பிய நபரை கண்டுபிடிக்கத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் எச்சரிக்கை கடிதத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு செயலிழப்பு தடுப்பு பிரிவினா், மோப்ப நாய் படை பிரிவு போலீஸாா், ஆட்சியா் அலுவலகத்தின் நுழைவுவாயில், வாகனம் நிறுத்தும் இடம், இரண்டு கட்டடங்களில் நுழைவாயில் உள்ள அனைத்து தளங்களிலும் ஒவ்வொரு அறையாகச் சென்று சோதனையிட்டனா். இந்த சோதனையானது சுமாா் 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்தது. சந்தேகப்படும்படியாக எந்தப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இந்த சோதனையானது தொடா்ந்து நடக்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.