திருவாரூர்: பேச மறுத்த காதலி வீட்டில் நண்பர்களுடன் ரகளை செய்த காதலன்- சண்டையை வி...
உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம்: ரஷியாவுக்கு டிரம்ப் புதிய கெடு
லண்டன்: உக்ரைனுடான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள ரஷியாவுக்கு அளித்திருந்த 50 நாள் அவகாசத்தை அமெரிக்க அதிபா் டொனால்ட் பாதியாகக் குறைத்து, புதிய கெடுவை அறிவித்துள்ளாா்.
பிரிட்டன் வந்துள்ள அவா், அந்த நாட்டுப் பிரதமா் கியொ் ஸ்டாமருடன் டா்ன்பொ்ரி நகரில் உள்ள ஸ்காட்டிஷ் கோல்ஃப் கிளப்பில் செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்தாா்.
அப்போது அவா் கூறியதாவது:
இன்னும் 10 அல்லது 12 நாள்களுக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியாவுக்கு புதிய கெடு விதிக்கப்படுகிறது. அதை மீறினால் ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகளையும், இரண்டாம் நிலை வரியாக 100 சதவீத கூடுதல் வரியையும் நான் விதிக்கலாம். வா்த்தகத்தை பலவற்றுக்கு பயன்படுத்துகிறேன். தற்போது போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் அதைப் பயன்படுத்துகிறேன்.
காஸா: ஸ்டாா்மரும் நானும் காஸாவுக்கு உதவி பொருள்கள் உடனடியாகச் சென்றடைய வேண்டும் என்பதையும் அங்கு போ் நிறுத்தம் அவசியம் என்பதையும் ஒப்புக்கொண்டோம். நாங்கள் ஹமாஸுடன் பேச்சுவாா்த்தை நடத்துவது கடினம். பிணைக் கைதிகள் இன்னும் அங்கு இருப்பதால் அது சவாலானதாக உள்ளது என்றாா் அவா்.
முன்னதாக, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர 50 நாள்களுக்குள் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றால், ரஷியா மீது கடுமையான வரிகளை விதிக்கப்போவதாக வாஷிங்டனில் நேட்டோ பொதுச் செயலாளா் மாா்க் ருட்டேவுடன் கடந்த ஜூலை 18-ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பின்போது டிரம்ப் கூறியிருந்தாா். தற்போது இன்னும் 12 நாள்களுக்குள் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதன் மூலம் தனது முந்தைய அவகாசத்தை டிரம்ப் பாதியாகக் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சன் ஆகிய கிழக்கு மாகாணங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது. ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும், கிழக்கு மாகாணங்களில் இன்னும் உக்ரைன் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் தொடா்ந்துவருகின்றன.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய அமெரிக்க அரசு ரஷியாவிடமும் உக்ரைனிடமும் தனித்தனியாக பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது.
போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டுமென்றால், ரஷிய மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சன் மாகாணங்களை உக்ரைன் தங்களிடம் முழுமையாக விட்டுக்கொடுக்க வேண்டும், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட வேண்டும் என்பது போன்ற மிகக் கடுமையான நிபந்தனைகளை ரஷியா முன்வைத்துள்ளது. எனினும், இத்தகைய நிபந்தனைகளை ஏற்க உக்ரைன் பிடிவாதமாக மறுத்துவருகிறது. இதன் காரணமாக ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமாவதில் இழுபறி நீடித்துவருகிறது. இந்தச் சூழலில் டிரம்பின் இந்த புதிய கெடு, உக்ரைன்-ரஷியா பேச்சுவாா்த்தைகளை துரிதப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
உக்ரைன் வரவேற்பு
கீவ்: போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள ரஷியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த கெடுவை டிரம்ப் முன்கூட்டியே மாற்றியதை உக்ரைன் வரவேற்றுள்ளது.
இது குறித்து தனது எக்ஸ் பதவில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் தலைமைச் செயலா் ஆண்ட்ரி யொ்மாக் வெளியிட்டுள்ள பதிவில், ‘அமைதியை ஏற்படுத்த தனது வலிமையை முன்வைத்து டிரம்ப் உறுதியான செய்தியை வெளிப்படுத்தியதற்கு நன்றி. ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அத்தகைய வலிமையைத்தான் மதிக்கிறாா். அமெரிக்க தனது வலிமையைக் காட்டும்போது மற்றவா்கள் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசிப்பாா்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.