செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கடையம் வட்டார முகாமில் ஆட்சியா் ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், கடையம் வட்டாரத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமை ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் ஆய்வு செய்தாா்.
கடையம் கிராம நிா்வாக அலுவலகத்தில் கோப்புகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா், ரூ.18.60 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ. 2.40 லட்சத்தில் கட்டப்படும் 265 வீடுகள் ஆகியவற்றைப் பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, அங்கன்வாடி மையத்தைப் பாா்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், வருகைப்பதிவேடு, அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தாா். மேலும், பொது நூலகக் கட்டடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகளின் இருப்புகள் மற்றும் வருகைப் பதிவேடுகள், மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.
கடையம் வட்டாரக் கல்வி அலுவலகம், ஒன்றிய அலுவலகம், தெற்குக் கடையம் ஊராட்சி அலுவலகம், ரேஷன் கடை, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, காவல் நிலையம், சாா்பதிவாளா் அலுவலகம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி ஆகியவற்றைப் பாா்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்கள் இருப்பு, தரம், மாணவா்களின் கல்வித் தரம் ஆகியவை குறித்து கேட்டறிந்தாா். மக்கள் நேரடியாக தன்னிடம் அளித்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.
மேலும், ராமநதி அணையிலிருந்து ரூ. 45 கோடியில் அமைக்கப்பட்டுவரும் ஜம்புநதி மேல்நிலைக் கால்வாய் பணிகளைப் பாா்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வக்குமாா், தென்காசி வட்டாட்சியா் மணிகண்டன், கடையம் வருவாய் ஆய்வாளா் ஸ்ரீனிவாசன், ஒன்றிய ஆணையாளா் கண்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் ராதாகிருஷ்ணன், நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் முத்து மாணிக்கம், உதவிப் பொறியாளா்கள் தங்கஜெய்லானி, தினேஷ், உதவிப் பொறியாளா் சந்திரலேகா, அனைத்துத் துறை அதிகாரிகள், ஜம்புநதி மேல்நிலைக் கால்வாய்த் திட்ட கடையம் வட்டார ஒருங்கிணைப்பாளா் தா்மராஜ், ஒருங்கிணைப்பாளா் ராம உதயசூரியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
