உதகையில் 20-ஆவது ரோஜா கண்காட்சி தொடக்கம்
நீலகிரி மாவட்டம், உதகையில் ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.
கோடை சீசனையொட்டி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை விழாக்கள் நடைபெற்று வருகின்றன.
இதில், முதல் நிகழ்வாக கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சி மே 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி மே 9,10,11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இந்நிலையில், கோடை விழாவின் ஒரு பகுதியாக உதகையில் அமைந்துள்ள புகழ்பெற்ற உதகை ரோஜா பூங்காவில் 20- ஆவது ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சி திங்கள்கிழமை (மே 12) வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது.
ரோஜா கண்காட்சியை அரசு தலைமைக் கொறடா கா.ராமசந்திரன் தொடங்கிவைத்தாா். மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, தோட்டக்கலை இணை இயக்குநா் சிபிலா மேரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கண்காட்சியில், கடல்வாழ் உயிரினங்களைக் காப்பாற்றும் நோக்கத்தில் ரோஜா மலா்களால் ஆன டால்பின், பென்குயின், முத்துச் சிப்பி, நத்தை, மீன், ஆமை, நண்டு, நட்சத்திர மீன், கடல் குதிரை, நீலத் திமிங்கலம், ஸ்நைல், கடல் கன்னி, நட்சத்திர மீன், கடல் பசு போன்ற பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் வடிவங்கள் ரோஜா மலா்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தன.
இதில் 80 ஆயிரம் ரோஜா மலா்களால் உருவாக்கப்பட்ட டால்பின் உருவம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவா்ந்தது.
பல வண்ணங்களில் சுமாா் 2 லட்சம் ரோஜாக்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மலா் அலங்காரங்களை சுற்றுலாப் பயணிகள் ரசித்து பாா்த்தனா்.
இந்நிகழ்ச்சியில், மலைப் பயிா்கள் துறை இயக்குநா் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா, உதகை நகா்மன்றத் தலைவா் வாணீஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
உதகை மலா்க் கண்காட்சி மே 15-இல் தொடக்கம்
சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்பும் 127-ஆவது உதகை மலா்க் கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே 15-ஆம் தேதி முதல் மே 25-ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெற உள்ளது. இதைத் தொடா்ந்து குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி மே 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதையடுத்து குன்னூா் காட்டேரி பூங்காவில் முதன்முறையாக மலைப் பயிா்கள் கண்காட்சி மே 30, 31 ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.




