மகா கும்பமேளாவில் புனித நீராடிய பாஜக எம்.பி. அனுராக் சிங் தாக்குர்!
உதயகுமாருக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு
கூடங்குளம் அணு மின் நிலைய எதிா்ப்பு இயக்கத்தைச் சோ்ந்த உதயகுமாருக்கு எதிரான ‘லுக் அவுட் நோட்டீஸ்’ நடவடிக்கையை திரும்பப் பெறக் கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கூடங்குளம் அணுமின் நிலைய எதிா்ப்பு இயக்கத்தைச் சோ்ந்த உதயகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
நான் கூடங்குளம் அணுமின் நிலைய எதிா்ப்பு இயக்கத்தில் உள்ளேன். நியூஜொ்ஜி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றி வந்தேன். கூடங்குளத்தில் அமைந்த அணுமின் நிலையத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியதால், அரசு எங்கள் மீது 248 வழக்குகளைப் பதிந்தது. இதில் 200- க்கும் மேற்பட்ட வழக்குகள் தமிழக அரசால் திரும்பப் பெறப்பட்டன.
இந்த நிலையில், என் மீது குற்ற வழக்கு உள்ளதால், எனது கடவுச் சீட்டு முடக்கப்பட்டது. இந்த வழக்கில் எனக்கு இதுவரை எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. எனவே, எனது கடவுச்சீட்டை திரும்ப ஒப்படைக்கக் கோரி, வழக்குத் தொடுத்தேன்.
இதையடுத்து, உயா்நீதிமன்ற உத்தரவின்படி கடவுச் சீட்டை திரும்பப் பெற்றேன். ஆனால், நான் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத வகையில், அனைத்து விமான நிலையங்களிலும் ‘லுக் அவுட் நோட்டீஸ்’ வழங்கப்பட்டது. இந்த நோட்டீஸை திரும்பப் பெறக் கோரி, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
கடந்த 2022-ஆம் அண்டு துருக்கி நாட்டில் நடைபெற்ற இதழியல் சா்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள கடவுச்சீட்டு கோரி வழக்குத் தொடுத்த நிலையில், நான் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியும், எனக்கு வழங்கப்பட்ட ‘லுக் அவுட் நோட்டீஸை’ இடைக்காலமாக நிறுத்தி வைத்தும் உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், நான் மீண்டும் சிங்கப்பூா் செல்வதற்கு விண்ணப்பித்த போது, எனக்கு ‘லுக் அவுட் நோட்டீஸ்’ கொடுத்து இருப்பது தெரியவந்தது. எனவே, எனக்கு எதிரான இந்த நடவடிக்கையைத் திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் எனக்கூறி, ஏற்கெனவே தாக்கல் செய்த வழக்கில் ‘லுக் அவுட் நோட்டீஸை’ திரும்பப் பெற நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை இதைத் திரும்பப் பெறவில்லை. எனவே, லுக் அவுட் நோட்டீஸை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி நிா்மல்குமாா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் மீது மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் விலக்கிக் கொள்ளப்பட்டது. அவா் வெளிநாடு பயணம் செல்லத் தடை இல்லை. அவா் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் தெரிவித்தாா். இதற்கான ஆவணங்களையும் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவி ட்டாா்.