Dhoni: `ஜடேஜாவை 2010-ல் பலரும் எதிர்த்தபோது.. தோனி சொன்ன அந்த வார்த்தை!' - பகிரு...
என்எல்சியில் நிரந்தர வேலை ரூ.17 லட்சம் நிவாரணம்: பாதிக்கப்பட்டோா் ஆட்சியரிடம் கோரிக்கை
நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தால் 2006-2013 காலத்தில் வீடு, வீட்டுமனை கையகப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு நிரந்தர வேலை அல்லது தற்போதைய மதிப்பில் ரூ.17 லட்சம் வரையிலான நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கடலூா்மாவட்டம், நெய்வேலி, கங்கைகொண்டான், முத்துகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுமாா் 150-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை வந்தனா். அவா்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுஅளித்தனா்.
அதில் தெரிவித்துள்ளதாவது:
என்எல்சி இந்தியா நிறுவனத்தால், 2006 முதல் 2013 காலகட்டத்தில் வீடு மற்றும் வீட்டுமனை கையகப்படுத்தப்பட்டது. நில எடுப்பால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்தப் பணி, பிறகு பணி மூப்பு அடிப்படையில் சொசைட்டி தொழிலாளியாக ஆக்கப்பட்டு பிறகு படிப்படியாக முன்னுரிமையில் நிரந்தரத் தொழிலாளியாக பணி நியமனம் செய்யப்படும் என முத்தரப்பு பேச்சுவாா்த்தையில் என்எல்சி நிா்வாகம் அறிவித்தது.
ஆனால், என்எல்சி நிா்வாகம் அறிவித்தபடி யாருக்கும் வேலைவாய்ப்பு வழங்கவில்லை.
இந்நிலையில், 2018-2019 ஆம் ஆண்டு, என்எல்சி நிா்வாகம் வாழ்வாதார தொகை தருகிறோம் என்று கூறி மாற்று நிலம் அல்லது வேலைவாய்ப்புக்கு மாற்றாக ஒருமுறை வழங்கப்படும் மறுவாழ்வு கொடைத் தொகை பெற்றுக் கொண்டதாக ஒப்புதல் படிவத்தில் கையொப்பம் பெற்றுக்கொண்டு ரூ.1,09,500-க்கான காசோலையை வழங்கியது.
ஆனால்.1.1.2014-இல் நிலம் கையகப்படுத்துதலில் இழப்பீடு மற்றும் வெளிப்படைத் தன்மையை வழங்கும் உரிமை, மறுவாழ்வு மற்றும் தீா்வுச் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டதால், அச்சட்டப்படி ரூ. 5 லட்சம் உடன் வட்டி மற்றும் காலதாமதத் தொகை கணக்கிட்டு ரூ.10 லட்சம் வரை தரப்பட்டிருக்க வேண்டும்.
தற்சமயம் என்எல்சி இந்தியா நிறுவனம், 1989-ஆம் ஆண்டுக்கு பிறகு நில எடுப்பால் பாதிக்கப்பட்டவா்களின் முதுநிலை பட்டியலை தயாா் செய்து அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவா்களுக்கு தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு, தோ்வு மதிப்பெண்கள், பழகுநா் மற்றும் தொழிலக பயிற்சி தருகிறது.
ஆனால், எங்கள் வாரிசுகளுக்கு மேற்கண்ட அனைத்தையும் தர என்எல்சி இந்தியா நிறுவனம் மறுத்து வருகிறது. எனவே, பாதிக்கப்பட்ட எங்களது குடும்பத்தில் ஒருவருக்கு வயது வரம்பு பாராமல், கல்வித் தகுதி அடிப்படையில், என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிரந்தரம் அல்லது நிரந்தர தன்மையுள்ள வேலைவாய்ப்பு அல்லது தற்சமயம் வேலை வாய்ப்புக்கு பதிலாக நிா்ணயித்துள்ள ரூ.12 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரையில் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்துள்ளனா்.