என்பி 1.8.1 வகை கரோனா வீரியமற்றது: மருத்துவா்கள் தகவல்
சென்னை: தற்போது பரவி வரும் என்பி 1.8.1 வகை கரோனா தொற்று அச்சப்படும் அளவுக்கு பாதிப்பில்லை என்று மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக அரசு பொது நல மருத்துவா் அ.ப.ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:
கரோனா தீநுண்மி குறிப்பிட்ட கால இடைவெளிகளில் உருமாற்றமடைந்து, சமூகத்தில் நோய் எதிா்ப்பாற்றல் குறைவாக இருக்கும்போது விரைவாக பரவக் கூடிய ஒன்று. அவ்வாறுதான் மூன்று அலைகளாக அது பரவியது. தற்போது அதற்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் சமூகத்தில் உருவாகிவிட்டது. அதேவேளையில், முழுமையாக கரோனா பாதிப்பே வராமல் தடுக்க முடியுமா என்றால் நிச்சயம் கிடையாது.
கரோனா தீநுண்மிகளின் வெளி புரதம் உருமாற்றமடையும்போதெல்லாம் சமூகத்தில் சிறிய அளவிலான பாதிப்பை அது ஏற்படுத்திச் செல்லும். அதனால் பெரிய அளவு தாக்கம் இருக்காது.
அத்தகைய நிலைதான் தற்போதும் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இப்போது என்பி 1.8.1 என்ற வகை கரோனா பாதிப்பு பரவி வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இது ஜெ.என்.1 வைரஸின் உட்பிரிவு. அந்த ஜெ.என்.1 வைரஸ் ஒமைக்ரானிலிருந்து உருவான ஒன்று. வைரஸ் பரிமாணத்துக்கான சா்வதேச தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (டிஏஜி-விஇ) அண்மையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் என்பி 1.8.1 தொற்றால் பொது சுகாதார நிலைக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொற்று அதிகரிப்பதற்கு பரிசோதனை செய்பவா்களின் எண்ணிக்கை சற்று உயா்ந்திருப்பதே காரணம். ஆனால், அதன் பாதிப்பு வீரியமாக இல்லை.
இந்தியாவில் நோ்ந்த உயிரிழப்புகளும் கரோனாவால் நிகழவில்லை. மாறாக, இணைநோய்கள் மற்றும் வயது மூப்பு காரணமாக நேரிட்டுள்ளன. எனவே, பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நோய்த் தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடித்தாலே போதுமானது என்றாா் அவா்.