ஏப்ரலில் 87.59 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்!
2025 ஏப்ரல் மாதத்தில் 87.59 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பகத்தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 87,59,587 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும் பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும் மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 30.04.2025 அன்று 3,49,675 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2025, ஏப்ரல் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 6,15,850 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 1,447 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 128 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 39,11,883 பயணிகள் (ஆன்லைன் க்யுஆர் 1,45,753; பேப்பர் க்யுஆர் 19,12,904; ஸ்டேடிக் க்யுஆர் 2,65,787; வாட்ஸ்ஆப்- 5,83,351; பேடிஎம் 4,09,358; போன்பே– 3,29,949; ஓஎன்டிசி– 2,64,781), சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 42,30,279 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்ஆப்- (+91 83000 86000), பேடிஎம் செயலி, போன்பே மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.
மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.