தினமணி செய்தி எதிரொலி: வடவாறு பாலையூா் பாசன வாய்க்கால் தூா்வாரப்பட்டது
ஏர் இந்தியா கருப்புப் பெட்டி வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகிறதா?
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்திய விமானத்தின் கருப்புப் பெட்டி, விசாரணைக்காக வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டாது என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
விமான விபத்து விசாரணைக்காக அமைக்கப்பட்ட குழுவே கருப்புப் பெட்டியை ஆய்வு செய்து விசாரணை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி அமெரிக்காவுக்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், அமைச்சர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
ஹெலிகாப்டர் மற்றும் சிறிய விமானங்களுக்கான உச்சி மாநாடு 2025-ல் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் ராம்மோகன் நாயுடு,
விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் கருப்புப் பெட்டி ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகிறது என்பது வெறும் கணிப்பு மட்டுமே. தற்போது விமான விபத்தை விசாரிக்கும் பணியகத்தின் குழுவே இதனை ஆய்வு செய்து வருகிறது எனக் குறிப்பிட்டார்.
மேலும், கருப்புப் பெட்டியில் உள்ள காலவரிசை தரவுகள் எப்போது மீட்கப்படும் என்பது குறித்த கேள்விக்கு, இது முழுக்க தொழில்நுட்பம் சார்ந்தது. விசாரணைக் குழு சரியான நடைமுறைகளை பின்பற்றி ஆய்வு செய்து வருகிறது. ஆய்வின் முடிவில், விமான விபத்துக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தெரியவரும் எனத் தெரிவித்தார்.
விமான விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த சிறப்புக் குழு அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விமான விபத்து
குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த வாரம் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியதில் 270 பேர் பலியாகினர்.
இந்த விபத்துக்கான காரணம் விமானிகளா? தொழில்நுட்பக் கோளாறா? பறவைகள் மோதியது காரணமா? அல்லது வேறேதும் பிரச்னையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விபத்து பகுதியில் இருந்து மீட்கப்பட்ட கருப்புப் பெட்டியின் வெளிப்புறத்தில் அதிகளவில் சேதம் ஏற்பட்டிருப்பதால் தரவுகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க | “வாக்காளர்களின் ஓட்டுகள் திருடப்படுகின்றன” -ராகுல்: பின்னணியில் பாஜக?