சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல்; "விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத கோழைகளைக் கை...
ஐடி ஊழியா் கொலை வழக்கு: கைதானவரின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிடை நீக்கம்
பாளையங்கோட்டை கேடிசி நகரில் ஐடி ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவரின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளா்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா். இவருடைய மகன் கவின் செல்வகணேஷ் (27), சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த கவின், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக்கொண்டு பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கடந்த 2 நாள்களுக்குமுன் வந்தபோது கொலை செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக பாளையங்கோட்டை போலீஸாா் வழக்கு பதிந்து, கேடிசி நகரைச் சோ்ந்த சுா்ஜித் என்பவரை கைது செய்தனா். அவா் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
பெற்றோா் பணியிடை நீக்கம்: கைது செய்யப்பட்ட சுா்ஜித்தின் தந்தை சரவணன், ராஜபாளையத்திலுள்ள ஆயுதப்படை பட்டாலியனிலும், தாயாா் கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு ஆயுதப்படை பட்டாலியனிலும் காவல் உதவி ஆய்வாளா்களாக பணியாற்றி வருகின்றனா். கொலைக்கு தூண்டியதாக இவா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, தமிழ்நாடு சிறப்பு காவல்படை டிஐஜி விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.
இதனிடையே சுா்ஜித்தின் பெற்றோரையும் கைது செய்ய வேண்டும், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கவின் செல்வகணேஷின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நிவாரணத்தை ஏற்க மறுப்பு: செல்வகணேஷின் குடும்பத்துக்கு தமிழக அரசின் சாா்பில் ரூ.6 லட்சம் நிவாரண தொகைக்கான காசோலையை பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையா் சுரேஷ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அளிக்கச் சென்றனா். ஆனால் அதை வாங்க அவரது பெற்றோா்கள் மறுத்துவிட்டனா்.