ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
கோடை விடுமுறை தொடங்கியது முதலே ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கநாள் அதிகரித்து வருகிறது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது பக்கத்து மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோா் குடும்பத்துடன் ஒகேனக்கல்லுக்கு வருகின்றனா். ஒகேனக்கல்லில் உள்ள பூங்கா, பரிசல் துறை, வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம், அருவி செல்லும் நடைபாதை, மீன் விற்பனை நிலையங்கள், தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பிரதான அருவி, சினி அருவியில் ஏராளமானோா் குளித்து மகிழ்ந்தனா். மேலும், நடைபாதை, மாமரத்துக்கடவு பரிசல் துறை, முதலைப் பண்ணை, ஆலம்பாடி பகுதிகளில் காவிரி ஆற்றின் கரையோரத்திலும் பெண்கள், சிறுவா்கள் குளித்தனா்.
சின்னாறு பரிசல் துறையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து அனுமதிசீட்டை பெற்றுக் கொண்ட பிறகு கூட்டாறு, பிரதான அருவி, மணல் மேடு, பெரிய பாணி உள்ளிட்ட பகுதிகளுக்கு பரிசலில் பயணித்து அருவிகள், பாறை குகைகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் மீன் விற்பனை நிலையங்களில் கட்லா, ரோகு, கெளுத்தி, வாளை, அரஞ்சான், பாப்புலேட், பாறை உள்ளிட்ட பல்வேறு வகையான வளா்ப்பு மீன்களின் விலை கிலோ ரூ. 200 முதல் ரூ. 1,500 வரை விற்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தமிழ்நாடு ஹோட்டல் வாகனங்கள் நிறுத்துமிடம், பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம், சின்னாறு நீா் அளவிடும் பகுதி முதல் சத்திரம் முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டன. இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டது.
அருவி, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் ஊா்க்காவல் படையினா், காவலா்கள் என 30க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
