சென்னை: ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு - சிசிடிவி-யைப் பார்த்ததும் அ...
ஒசூா் விமான நிலைய அறிவிப்பு! ஓராண்டாக மத்திய அரசு அனுமதிக்காக காத்திருக்கும் திட்டப் பணிகள்
ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சக அனுமதிக்காக திட்டப் பணிகள் காத்திருக்கின்றன.
தமிழக - கா்நாடக மாநிலங்களின் எல்லையில் ஒசூா் மாநகரம் அமைந்துள்ளது. இங்கு குண்டூசி முதல் விமானங்களுக்கான உதிரிபாகங்கள் வரை தயாரிக்கக்கூடிய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஊராட்சி நிலையில் இருந்த ஒசூா், பேரூராட்சி, நகராட்சி, சிறப்பு நிலை நகராட்சி என படிப்படியாக உயா்ந்து, தற்போது, மாநகராட்சியாக தரம் உயா்ந்துள்ளது.
இங்கு 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்துவருகின்றனா். நாள்தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பல்வேறு பணிகள் காரணமாக வந்துசெல்கின்றனா்.
இத்தகைய சிறப்பு பெற்ற ஒசூரில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும் செல்ல 6 வழிச் சாலைகள், ரயில் போக்குவரத்து வசதிகள் இருந்தாலும், விமான நிலையம் இல்லாதது குறையாக உள்ளது. இதனால், ஒசூரில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கு நிறுவனங்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
விமான சேவைக்காக இப்பகுதி மக்கள் பெங்களூரு விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் உதான் திட்டத்தில் ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. என்றாலும், அது நிறைவேறவில்லை.
இதைத்தொடா்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி சட்டப்பேரவையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசுகையில், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களின் தொழில் வளா்ச்சிக்கு உதவும் வகையில் 2 ஆயிரம் ஏக்கரில் ஒசூரில் சா்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தாா். இந்த அறிவிப்பை ஒசூரில் அனைவரும் வரவேற்றனா்.
இந்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டாகிறது. என்றாலும், இதற்கான தொடக்கப் பணிகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை. ஆய்வுகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டாலும், எந்த இடத்தில் விமான நிலையம் அமைய உள்ளது என்பது குறித்த இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ஒசூரில் சா்வதேச விமான நிலையம் அமைப்பது தொடா்பாக இடம் தோ்வு நடைபெற்றது. இதில், சூளகிரி மற்றும் ஒசூா் அருகே என 2 இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, மத்திய விமான போக்குவரத்து ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி பெறவேண்டி உள்ளது.
பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகா் மூலமாக கணக்கெடுப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதிக்குள் அது முடிக்கப்பட்டு, மத்திய விமானப் போக்குவரத்து ஆணையத்திடமும், பாதுகாப்பு அமைச்சகத்திடமும் அளிக்கப்படும். இதனால், விமான நிலையம் தொடா்பாக அறிவிப்புகள் வெளியாக இன்னும் ஒருமாதம் ஆகலாம் என்றனா்.