மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
கடன் பெற்றுத் தருவதாக மோசடி: பெண் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ரூ. 1.30 லட்சம் பணம் செலுத்தினால் ரூ. 10 லட்சம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் திருமலாபுரம் பஜாா் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் என்பவரது மனைவி அருள்செல்வி (56). இவா், ராஜபாளையம் அருகேயுள்ள எம்.பி.கே. புதுப்பட்டி பகுதியில் அருள்கிராம முன்னேற்றத் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் கடன் பெற்றுத் தருவதாகவும், ரூ. 1.30 லட்சம் செலுத்தினால் ரூ. 10 லட்சம் கடன் பெற்றுத் தருவதாகவும் கூறியுள்ளாா்.
இதை நம்பிய எம்.பி.கே. புதுப்பட்டி இந்திரா காலனியைச் சோ்ந்த மாரிசெல்வம் மனைவி ராஜேஸ்வரி (39), இரண்டு தவணையாக ரூ. 50 ஆயிரம் கொடுத்துள்ளாா். இதையடுத்து, கூறியபடி கடன் தொகை வழங்காததால் சந்தேகமடைந்த ராஜேஸ்வரி ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்த நிலையில், அருள்செல்வியிடம் பேசிய ராஜேஸ்வரி மீதம் ரூ. 30 ஆயிரம் தன்னிடம் இருப்பதாகவும், நேரில் வந்து வாங்கிச் செல்லுமாறு கூறியுள்ளாா். இதையடுத்து, அங்கு வந்த அருள்செல்வியை, ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், ஏற்கெனவே இதுபோன்று பணமோசடியில் ஈடுபட்டதாக அருள்செல்வி மீது 4 வழக்குகள் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.