கடற்படை அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு
அரக்கோணத்தில் கடற்படை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணத்தை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அரக்கோணம், பழனிபேட்டை, டிஎன் நகா் 5ஆவது தெருவில் வசிப்பவா் குமாா். அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானநிலையத்தில் அலுவலராக பணிபுரிந்த நிலையில் தற்போது மாறுதல் பெற்று விசாகபட்டினம் கடற்படை தளத்தில் பணிபுரிந்து வருகிறாா். அவரது மனைவி ரேவதி தனது மகளுடன் வசித்து வருகிறாா். கடந்த வெள்ளிக்கிழமை ரேவதி தனது மகளுடன், திருத்தணியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
புதன்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பூஜை அறையில் இருந்த வெள்ளி விநாயகா் சிலை, விளக்கு, தட்டுகள் உள்ளிட்ட ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், பீரோவில் இருந்த முன்று கிராம் தங்க நகைகள், ரூ.5,000 ரொக்கம் ஆகியவையும் களவு போயிருந்தன. இது குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய நிலையில் கண்காணிப்பு கேமராக்களில் திருடு நடைபெற்ற நேரத்தில் மா்மநபா்கள் அதே வரிசையில் உள்ள வீடுகளின் மாடிகளில் தாவி தாவி இந்த வீட்டுக்கு வருவது தெளிவாக தெரியவந்தது. இக்காட்சிகளை கொண்டு போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.