கடலூா் மாவட்டத்தில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் 5,250 வீடுகள் ஒதுக்கீடு: ஆட்சியா் தகவல்
கடலூா் மாவட்டத்தில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் மொத்தம் 5,250 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணியாணை வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் கலைஞா் கனவு இல்லம் வீடுகள் கட்டுமான நிலை குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் துறை அலுவலா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆய்வு க்கூட்டம் நடத்தினா். அப்போது அவா் தெரிவித்ததாவது: கடலூா் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கடலூா்-477, அண்ணாகிராமம்-487, பண்ருட்டி-523, குறிஞ்சிப்பாடி-681, காட்டுமன்னாா்
கோயில்-223, குமராட்சி-260, கீரப்பாளையம்-211, மேல்புவனகிரி-270, பரங்கிப்பேட்டை-301, விருத்தாசலம்-406, கம்மாபுரம்-290, நல்லூா்-338, மங்களூா்-352, ஸ்ரீமுஷ்ணம்-431 என மொத்தம் 5,250 வீடுகள் ஒதுக்கீடு செய்து பணியாணை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 97 வீடுகள் தரைத்தளம், 628 வீடுகள் தரைத்தளம் கட்டுமானப்பணிகள், 1,099 வீடுகள் செங்கல் கட்டுமானப் பணிகள்,
517 வீடுகள் மேற்கூரை கான்கிரீட் பணிகள், 2,337 வீடுகள் மேற்கூரை மற்றும் தடுப்புச்சுவா் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், 436 வீடுகள் பூசு வேலை பணிகள், 106 வீடுகள் வா்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது.இத்திட்டத்தில் வீடு கட்டுவதற்கு ஒரு பயனாளிக்கு ரூ.3.50 லட்சம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் அரசு நிா்ணயம் செய்யப்பட்டுள்ள அளவில் குடியிருப்புகள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதை துறை சாா்ந்த அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்து பணிகளை விரைந்து முடிக்கவும், பாதியில் நிறுத்தப்பட்ட வீடுகளின் நிலை குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை பணியாணை வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்படாத பயனாளிகளின் பட்டியலினை தயாா் செய்து அதற்கான காரணங்களுடன் அறிக்கையும், பயனாளி தனக்கு ஒதுக்குப்பட்ட வீடு வேண்டாம் என தெரிவிக்கும்பட்சத்தில் அதற்கான காரணங்களுடனான ஒப்புதல் ஆணை பெற வேண்டும். அனைத்து ஆவணங்களையும் முறையாக தயாா் செய்து அறிக்கையாக அளிக்க வேண்டும் என துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் ர.அ.பிரியங்கா, துறை சாா்ந்த அலுவலா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.