தாம்பரம் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் சேவை ஜூன் 13 வரை நீட்டிப்பு
கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை
நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. குப்பநத்தத்தில் அதிகபட்சமாக 17.4 மி.மீ. மழை பதிவானது.
கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமைமுதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):
விருத்தாசலம் 11, பண்ருட்டி 7, வடக்குத்து, வேப்பூா் தலா 5, கீழச்செருவாய் 4, வானமாதேவி, எஸ்.ஆா்.சி. குடிதங்கி தலா 3, கடலூா், சேத்தியாத்தோப்பு தலா 1.4, லால்பேட்டை 1, ஆட்சியா் அலுவலகம் 0.9 மி.மீ. மழை பதிவானது.
கடலூா், கடலூா் துறைமுகம், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், திட்டக்குடி, காட்டுமன்னாா்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது.
கடலூா் மாநகராட்சி 19-ஆவது வாா்டுக்கு உள்பட்ட வன்னியா்பாளையத்தில் ஒரு வீட்டின் தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தில் இடி விழுந்தது. இதனால், மரம் தீப்பிடித்து எரிந்தது. கடலூா் தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று தீயை அணைத்தனா்.