Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
கூட்டுறவுத் துறை சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரிக்கை
நெய்வேலி: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் கடலூா் மாவட்ட ஆட்சியரை மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் சந்தித்து கூட்டுறவுத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் அவா்கள் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை மாநிலப் பதிவாளா் விவசாயிகள் பெறும் பயிா் கடன் உள்ளிட்ட அனைத்து வகை கடன்களுக்கும் விவசாயிகளின் சிபில் அறிக்கையை பாா்த்து கடன் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறாா். தமிழ்நாடு அரசு கணக்கிட்டு வைத்துள்ள உற்பத்தி செலவின் அடிப்படையில் பயிா் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த பயிா் கடன்கள் இரண்டு மடங்கு குறைவாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் கூடுதல் செலவுகளை சமாளிப்பதற்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று வருகிறோம். விவசாயிகள் பயிா் க்கடனை கூட திரும்ப செலுத்த முடியாததால், அவ்வப்போது மாநில அரசும் கூட்டுறவு பயிா் கடன்களை தள்ளுபடி செய்து வருகிறது.
கூட்டுறவு சங்கங்களில் பெறப்படும் கடன்களும் இனிமேல் சிபில் அறிக்கையில் பதிவேற்றம் செய்யப்படும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் போது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பயிா் கடன் பெற முடியாத சூழ்நிலை ஏற்படும்.
எனவே, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு கூட்டுறவுத்துறையின் சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனா்.