கடைசி ஒருநாள்: 170 ரன்கள் விளாசி கீஸி கார்ட்டி அபாரம்; அயர்லாந்துக்கு இமாலய இலக்கு!
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது மட்டும் கடைசி ஒருநாள் போட்டியில் கீஸி கார்ட்டியின் அபார சதத்தினால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 385 ரன்கள் குவித்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (மே 25) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: தோனியிடம் எப்போதும் கேட்கப்படும் கேள்வி; பதிலால் ஆர்ப்பரித்த ரசிகர்கள்!
கீஸி கார்ட்டி சதம் விளாசல்
முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்கள் எடுத்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசிய கீஸி கார்ட்டி அதிகபட்சமாக 170 ரன்கள் (142 பந்துகளில்) எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். தனது அதிரடியான பேட்டிங்கால் கீஸி கார்ட்டி அயர்லாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.
அவரைத் தொடர்ந்து, கேப்டன் சாய் ஹோப் 75 பந்துகளில் 75 ரன்களும் (9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்), ஜஸ்டின் கிரீவ்ஸ் 23 பந்துகளில் அதிரடியாக 50 ரன்களும் (5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள்) எடுத்தனர்.
அயர்லாந்து தரப்பில் பேரி மெக்கார்த்தி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லியம் மெக்கார்த்தி 2 விக்கெட்டுகளையும், ஆண்டி மெக்பிரின் மற்றும் ஜியார்ஜ் டாக்ரெல் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: முகமது ஷமியின் டெஸ்ட் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறதா?
386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி களமிறங்கவுள்ள நிலையில், ஆட்டம் மழையால் தாமதம் ஆகியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு மழையால் முடிவு எட்டப்படாதது குறிப்பிடத்தக்கது.