`கட்சி விதிப்படியே பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்’ - எடப்பாடி மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்
அதிமுக பொதுச் செயலாளராகத் தான் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.
இதை எதிர்த்தும், அந்த பொதுக்குழு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

கூடவே, அ.தி.மு.க உறுப்பினர் எனக் கூறி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி, எடப்பாடி பழனிசாமியின் நியமனம் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து உரிமையியல் வழக்கைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், `பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
சூரியமூர்த்தி தொடுத்த இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், சூரியமூர்த்தி அ.தி.மு.க உறுப்பினரே அல்ல என்றும், உறுப்பினராக இல்லாத ஒருவர் கட்சியின் செயல்பாடு குறித்து கேள்வியெழுப்ப முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனு தள்ளுபடி
இத்தகைய சூழலில், இந்த மனுவை இன்று விசாரித்த உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சிவசக்திவேல் கண்ணன், "கட்சி விதிப்படி பொதுச்செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விதிகளின்படி பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று தெரிவிக்கவில்லை என்பதால், இந்த வழக்கு விசாரணைக்குரியது எனக் கூறி, சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்" என்று உத்தரவிட்டார்.