மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் முடிவா?
கடந்த 1995 ஆம் ஆண்டு சிட்கோ திட்டத்தின் கீழ் அதில் பணிபுரிந்த தொழிலாளியான கர்ணன் என்பவருக்கு அரசு தொழிலாளர்களுக்கான இடத்தை தமிழ்நாடு அரசு ஒதுக்கியிருந்தது.
அரசு ஊழியருக்கு ஒதுக்கும் இடத்தை வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என்ற விதிமுறை இருந்தும் கூட அப்போது மேயராக இருந்த தற்போதைய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சட்டவிரோதமாக அந்த இடத்தை வாங்கி அதில் பெரிய வீடு கட்டியதாகவும், இதில் சுப்பிரமணியன் தனது அரசுப் பதிவியை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருக்கிறது என புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு பார்த்திபன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் மா.சுப்ரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. பொதுவாக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவருக்கு எதிராக காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றால் அதற்கு சபாநாயகர் ஒப்புதல் வழங்க வேண்டும். அந்த அடிப்படையில் அப்போது சபாநாயகராக இருந்த தனபால் மா. சுப்ரமணியனை விசாரிக்க அனுமதி வழங்குகிறார்.
இதனை அடுத்து சுப்ரமணியனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து விசாரணை நடைபெறுகிறது. இதற்கு எதிராக சுப்ரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கீழமை நீதிமன்றம் விசாரணை நடத்த அனுமதி வழங்குகிறது.
இதனை அடுத்து மா.சுப்பிரமணியனுக்கு கீழமை நீதிமன்றம் சம்மன் அனுப்புகிறது. இதற்கு எதிராக மா.சுப்பிரமணியன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு நீதிபதி சுதான்சு சூதுலியா தலைமையிலான அமர்வில் விரிவாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

மா.சுப்ரமணியன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், `தாம் மேயராக பதவி வகித்த போது தான் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் தன்னை விசாரிக்க தமிழ்நாடு அரசுதான் ஒப்புதல் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் சபாநாயகர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். இது நடைமுறையில் தவறானது எனவே தன்னை விசாரிக்க உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும்’ என கோரிக்கை முன் வைத்தார்.
அப்போது எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், `மா.சுப்பிரமணியன் மேயராக இருந்தபோதுதான் முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கிறார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதுதான் அவருக்கு எதிராக எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சபாநாயகர் ஒப்புதல் வழங்கியது சரியானதுதான். எனவே மா.சுப்பிரமணியன் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதங்களை முன் வைத்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், `இந்த விவகாரத்தில் ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 17A கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது. அதன்படி பொது ஊழியர் முறைகேட்டில் ஈடுபட்ட போது அவர் வகித்த பதவியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசிடம் அனுமதி பெற வேண்டுமா அல்லது சபாநாயகர் இடம் அனுமதி பெற வேண்டுமா என்ற முக்கிய கேள்வி எழுந்து இருக்கிறது.

எனவே இது குறித்து அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உத்தரவிடலாம் என இருக்கிறோம். ஆனால் அதற்கு முன்பாக அமர்வை மாற்றுவது தொடர்பாக விசாரணை நடத்த விரும்புகிறோம். எனவே எதிர்மனுதாரர் தரப்பு இந்த விவகாரத்தில் பதிலளிக்க வேண்டும்” என நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை இரண்டு வார காலத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.