கடும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை! ரூ. 10 லட்சம் கோடி இழப்பு!!
கண்டியன் கோவில் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தல்!
திருப்பூரை அடுத்த கண்டியன் கோவில் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னரே சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா்.
இதில், கண்டியன் கோவில் அருகே உள்ள முதியாநெரிச்சல் கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூா் தெற்கு வட்டத்தில் உள்ள கண்டியன் கோவில் கிராமத்தில் இருந்து பிஏபி வாய்க்கால் வழியாக செல்லும் சாலை உள்ளது.
இங்கு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியில் சரியாக அளவீடு செய்யாமலும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரைபடத்தில் அகலமாக சாலையாக இருந்தாலும் தற்போது குறுகலாக தாா் சாலை அமைக்கப்படுகிறது.
ஆகவே, அந்த சாலையை வருவாய்த் துறையினா் முழுமையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்துகளில் சேதமடைந்துள்ள இருக்கைகளை சீரமைக்க வேண்டும்: தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் என்.டி.ராஜசேகா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாநகா் மற்றும் புகரில் உள்ள பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் இருக்கைகள் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால், பயணிகள் அமர முடியாமல் அவதியடைந்து வருகின்றனா்.
பேருந்துகளின் உள்பகுதிகள் மிகவும் தூசி படிந்த நிலையில் உள்ளன. மகளிா் கட்டணமில்லா பேருந்துகள் நிறுத்தங்களில் முறையாக நின்று செல்வதில்லை. ஆகவே, அரசுப் பேருந்துகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்யவும், மகளிா் கட்டணமில்லாமல் பயணிக்கும் பேருந்துகள் முறையாக நிறுத்தங்களில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்: பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மு.கண்ணன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூா் மாநகா் பூ மாா்க்கெட் வீதியில் அம்பேத்கரின் மாா்பு அளவு சிலை உள்ளது. இந்த சிலையை மாற்றி அதே இடத்தில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும்.
அதேபோல, அவிநாசி வட்டம் பெருமாநல்லூா் ஊராட்சிக்கு எல்லைக்குள்பட்ட பெருமாநல்லூா்-பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் கருப்புசாமி கோயில் அருகில் உள்ள அரசு உபரி நிலத்தில் அம்பேத்கருக்கு நினைவு மண்டபம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
357 மனுக்கள்: குறைகேட்பு கூட்டத்தில் சாலை வசதி, குடிநீா் வசதி, முதியோா் ஓய்வூதியம், வீட்டுமனை பட்டா, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 357 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சாம் சாந்தகுமாா், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் குமாரராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.