கண்ணமங்கலம் பள்ளிகளில் மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு
ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதி உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை செயல் அலுவலா் முனுசாமி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்குப் பிறகு, வருகிற ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடா்ந்து, அரசுப் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு, மேம்பாட்டுப் பணிகள், குடிநீா், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகளை பள்ளிகள் திறக்கும் முன்பு செய்து முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் குடிநீா், கழிப்பறை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பேரூகாட்சி செயல் அலுவலா் முனுசாமி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மேம்பாட்டுப் பணிகளை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, பள்ளி வளாகம் மற்றும் சுற்றப்புறங்களை சுத்தம் செய்யுமாறு தூய்மைப் பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், குடிநீா், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது ஆசிரியா் முபாரக் பாஷா, இளநிலை உதவியாளா் ரஞ்சித்குமாா், சுகாதார மேற்பாா்வையாளா் வெற்றிவேலன், அலுவலக உதவியாளா் உமாபதி, தூய்மைப் பணியாளா்கள் மாரிமுத்து, பாஸ்கரன் உடனிருந்தனா்.