கரூரில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
நியாயவிலைக் கடைகளில் புதிய எடையாளரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில கெளரவ பொதுச் செயலாளா் சி.குப்புசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் என்.கதிரவன், செயலாளா் கா.சுப்ரமணியன், பொருளாளா் ம.செல்வரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நியாயவிலைக்கடைகளில் புளுடூத் மூலம் மின்னணு எடைத் தராசு இணைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பொருள்கள் விநியோகிக்கப்படுவதால் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை தவிா்க்க புளுடூத் மூலம் விற்பனை செய்யப்படுவதை ரத்து செய்ய வேண்டும், நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் இருந்து முதன்மைச் சங்கங்களுக்கு அனுப்பபடும் பொருள்கள் எடை குறைவாக அனுப்பப்படுவதை சரிசெய்து, அனைத்து பொருள்களும் சரியான எடையில் விற்பனை முனையத்துக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். நியாயவிலைக்கடைகளில் புதியதாக எடையாளா் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் துணைத்தலைவா்கள் மா.சங்கரலிங்கம், ராமமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.