கரூர்: `பிறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்ய ரூ.5,000' -லஞ்சம் வாங்கிய தாசில்தார் சிறையில் அடைப்பு
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வீரணம்பட்டியைச் சேர்ந்தவர் ரேவதி - வேல்முருகன் தாம்பதியினர். இவர்களது மகள் பவித்ரா என்பவரின் பிறப்புச் சான்றிதழில் பெளத்ரா என்று தவறுதலாக இருப்பதற்கு பெயர் பிழை திருத்தம் செய்ய கடந்தாண்டு பிப்ரவரி மாதம் விண்ணப்பித்தனர்.
கிராம நிர்வாக அலுவலர், குறுவட்ட அலுவலர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, அவர்களுக்கு பெயர் திருத்தம் செய்யலாம் என கடந்த செப்டம்பர் 4-ம் தேதி அப்போது தாசில்தாராக இருந்தவர் பெயர் திருத்தம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளார். ஆனால், இதனை முறையாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யாமல் காலம் தாழ்த்தி அலைகழித்து வந்ததுடன் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் அதற்கு ரூ. 5,000 லஞ்சப்பணம் கேட்டுள்ளார்.
இதனால், விரக்தியடைந்த ரேவதி இது குறித்து கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரேவதியிடம் ரசாயனம் பவுடர் தடவிய ஐந்தாயிரம் ரூபாய் பணத்தினை அளித்து, அதனை கடவூர் தாசில்தார் சௌந்தரவள்ளியிடம் தருமாறு கூறியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, ரேவதி தாசில்தார் சௌந்தரவள்ளியிடம் பணம் அளிக்கும் போது மறைந்திருந்த கரூர் லஞ்ச ஒழிப்புதுறை டி.எஸ்.பி ஆம்ரோஸ் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, சாமிநாதன் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், லஞ்ச ஒழிப்பு போலீஸார் மேற்கொண்டு தாசில்தார் அலுவலக அறையினை சோதனையிட்டு அவரை கைது செய்தனர். பின்னர், அவரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் திருச்சியில் உள்ள மகளிர் சிறையில் அடைத்தனர்.
பெயர் பிழை திருத்தும் செய்வதற்காக பெண்ணிடம் ரூ.5,000 லஞ்சம் கேட்டு தாசில்தார் ஒருவர் கைதாகியுள்ள சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.