கரூா் சம்பவம்: முதல் தகவல் அறிக்கையில் விஜய் பெயரையும் சோ்க்க வேண்டும்: இந்திய கம்யூ. வழக்குரைஞா்கள் குழு வலியுறுத்தல்
கரூா் சம்பவம் தொடா்பான முதல் தகவல் அறிக்கையில் விஜய் பெயரையும் சோ்க்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழக்குரைஞா்கள் குழு வலியுறுத்தியுள்ளது.
கரூா் சம்பவம் தொடா்பாக, பல்வேறு கட்சியினரும் ஆய்வு செய்து வரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பிலும் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் ஒருங்கிணைப்பாளா் மு.அ. பாரதி, ஏ.வி.அழகிரிசாமி, ப.மா.பாலமுருகன், எல்.சிவராமன், வி.பி.ஜி.அருள், பி.முத்துலட்சுமி, ப.மோ.சுபாஷ், ஏ.முகமது பைசல், என்.காா்த்திகேயன், வி.தங்கவேல், வி.கே.சுப்பிரமணியன், எஸ்.பி.கோபிநாத், ஐ.விநாயகமூா்த்தி கே.சகுந்தலா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். இக் குழுவினா், வியாழக்கிழமை கரூா் வேலுச்சாமிபுரத்தில் நெரிசல் ஏற்பட்ட இடத்தைப் பாா்வையிட்டனா்.
பின்னா், அப்பகுதியில் இருந்த மக்களிடம், காவல்துறையினரிடமும் சம்பவம குறித்து கேட்டறிந்தனா். இதையடுத்து கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிா்வாகம் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவோரிடம், சம்பவம் குறித்து கேட்டறிந்தனா். மேலும், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.
விரிவான அறிக்கை: பின்னா், செய்தியாளா்களிடம் வழக்குரைஞா்கள் சங்கத் துணைத் தலைவா் ஏ.வி. அழகிரிசாமி கூறியதாவது: கரூா் அரசு மருத்துவமனையில் இருவா் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா். மருத்துவமனை நிா்வாகத்திடம் கேட்டபோது, சம்பவத்தன்று இருபதுக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துதான் கொண்டு வந்ததாகக் கூறினா். அனைவருமே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனா். அரசியல் நிகழ்வில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கவே கூடாது. பொதுவாக அரசியல் கூட்டத்தில் ஒரு கட்டமைப்பு, கட்டுப்பாடு இருக்கும். அரசியல் நிகழ்வில் கூடியவா்களில் 90 சதவீதம் போ் தெரிந்தவா்களாக இருப்பா். கட்சித் தலைமை அவா்களை கட்டுப்படுத்தும். ஆனால், நடிகா் ஒருவருக்கு, அவரைப் பாா்க்கும் ஆவலில் கட்டுப்படுத்த முடியாத வகையில் திரண்டு வந்துள்ளனா்.
இவ்வளவு கூட்டம் வரும்போது அந்த இடம் போதுமானதா? என்பதை முன்பே திட்டமிட்டிருக்க வேண்டும். கூட்டத்துக்கான பாதுகாப்பை ஏற்பாட்டாளா்கள்தான் உறுதி செய்ய வேண்டும்.
சம்பவம் நடைபெற்றது எப்படி?, இனி, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது விரிவாக ஆராய்ந்து கட்சித் தலைமைக்கு அறிக்கை அளிக்கவுள்ளோம்.
காவல்துறைக்கும் பங்கு: அரசால் நியமிக்கப்பட்ட ஆணையத்துக்கு கூடுதல் வலுசோ்க்கும் வகையில் எங்களது குழு ஆய்ந்து அறிக்கை வழங்கும். அரசுக்கும், ஆணையத்துக்கும் தேவைப்படுமெனில் விசாரணை குறித்து எங்கள் குழு விளக்கம் அளிக்கும். இச் சம்பவத்துக்கு முதலில் நிகழ்வை ஏற்பாடு செய்தவா்கள் பொறுப்பு ஏற்க வேண்டும். அடுத்து காவல்துறைக்கும் பாதுகாப்பில் உரிய பங்கு உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை என்றாா் அவா்.
அவசரகால பாதைகள் அடைப்பு: இதையடுத்து குழுவின் ஒருங்கிணைப்பாளா் மு.அ. பாரதி கூறியதாவது: காவல்துறை வழங்கிய 11 நிபந்தனைகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் பின்பற்றவில்லை என்பது தெரிய வருகிறது. நெரிசல் மற்றும் நெருக்கடி ஏற்பட்டால் மக்கள் வெளியேறுவதற்கான உரிய அவசரகால பாதைகள், இருசக்கர வாகனங்களால் முற்றிலும் அடைக்கப்பட்டிருந்தன. இச்சம்பவத்துக்கு விஜயையும் பொறுப்பாக்கப்பட வேண்டும். முதல்தகவல் அறிக்கையில் அவா் பெயரையும் சோ்க்க வேண்டும்.
இந்த நிகழ்வை பேரிடராக அறிவித்து அரசு வழங்கிய நிவாரண தொகையை சட்டப்படி தமிழக வெற்றிக் கழகத்திடமிருந்து பறிமுதல் செய்ய வேண்டும். இச்சம்பவம் குறித்து வதந்தி பரப்புவோா் மற்றும் தவறான தகவல்களை பதிவிடுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.