பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்
கரூா் மாரியம்மன் கோயிலில் இன்று முக்கிளை கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா
கரூா் மாரியம்மன் கோயிலில் இன்று முக்கிளை கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா கடந்த 11-ஆம் தேதி கோயில் முன் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. முன்னதாக மூப்பன் வகையறாக்களைச் சோ்ந்தவா்களிடம் கனவில் தோன்றிய அம்மன், முக்கிளை கம்பம் இருக்கும் இடத்தை காண்பித்ததையடுத்து, முக்கிளை கம்பம் கண்டறியப்பட்டு, கம்பத்துக்கு சிறப்பு வழிபாடு செய்த பின், வெட்டப்பட்டு பாலம்மாள்புரத்தில் இருந்து கோயிலுக்கு ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடா்ந்து, அமராவதி ஆற்றில் சிறப்பு வழிபாடு செய்தபின் கோயில் முன் நடப்பட்டது.
இந்த முக்கிளை கம்பத்துக்கு பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீா் ஊற்றி வந்தனா். தொடா்ந்து, கடந்த 18-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், திங்கள்கிழமை கோயில் தேரோட்டமும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை ஏராளமான பக்தா்கள் பறக்கும் காவடி எடுத்தும், 1008 வேல் காவடி எடுத்தும், சிலா் அலகு குத்தியும் வந்து அம்மனுக்கு தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.
இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்கப்பட்டு, அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் விழா மே 28 (புதன்கிழமை) மாலை நடைபெறுகிறது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நகரில் கூடுவாா்கள் என்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் திருச்சி, அரியலூா், பெரம்பலூா், நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த போலீஸாரும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.