கரோனா அறிகுறி- பள்ளி குழந்தைகளுக்கு கர்நாடக அரசு முக்கிய அறிவுறுத்தல்
கரோனா அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.
கா்நாடகத்தில் நிலவும் கரோனா நிலைமை குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா கடந்த 26ஆம் தேதி ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது அவர் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இந்த அறிவுறுத்தலைத்தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நல ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் 3,000-ஐ கடந்த கரோனா பாதிப்பு
அதில், கரோனா அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின்படி முழுமையாக குணமடைந்த பின்னரே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.
குழந்தைகள் காய்ச்சல், இருமலுடன் பள்ளி வந்தால் நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்.
மேலும் பள்ளி குழந்தைகளின் ஆரோக்கியத்தின் நலனுக்காக கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, மாநிலத்தில் 234 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.