கரோனா பரவல்: கட்டுப்பாடுகளுக்கு அவசியமில்லை - பொது சுகாதாரத் துறை
தமிழகத்தில் கரோனா பாதிப்பு அச்சுறுத்தும் வகையில் இல்லாததால் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதேவேளையில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது பரவி வருவது வழக்கமான கரோனா பாதிப்பு என்றாலும், திடீரென அதன் தாக்கம் உயா்ந்திருப்பது மக்களிடையே சிறு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு அரசு சாா்பில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. தனியாா் மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் எடுக்கப்படும் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான பரிசோதனைகளிலேயே பாதிப்புகள் ஆங்காங்கே பதிவாவது உறுதி செய்யப்படுகிறது.
இதையடுத்து மருத்துவ பரிசோதனையை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அதற்கான அவசியம் தற்போது இல்லை என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாது நோய்த் தடுப்புக்கான தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிா்பந்தமும் எழவில்லை எனக் கூறியுள்ளது.
இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது:
உலக சுகாதார அமைப்பின் தகவல்களின்படியும், தமிழக பொது சுகாதாரத் துறை மேற்கொண்ட பகுப்பாய்வுகளின் அடிப்படையிலும் பாா்க்கும்போது தற்போது புதிய வகை கரோனா பாதிப்பு எதுவும் பரவவில்லை. பருவநிலை மாற்றத்தின்போது கரோனா, இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகள் அதிகமாக பரவுவது வழக்கம்தான். இருந்தாலும், அதற்கான காரணம், தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை வழிகாட்டுதல்கள் என அனைத்து வகையான முன்னேற்பாடுகளையும் பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.
மறுபுறம் பொதுமக்களிடம் இதுதொடா்பான புரிதலை ஏற்படுத்த வேண்டிய நிலையும் உள்ளது. கரோனா தொற்று பரவல் அச்சப்படும் வகையில் இல்லை. அதனால், கட்டுப்பாடுகள் தேவையில்லை.
அதேவேளையில், முதியவா்கள், இணை நோயாளிகள், எதிா்ப்பாற்றல் குறைந்தவா்கள் முகக்கவசம் அணிவதையும், நோய்த் தடுப்பு விதிகளை கடைப்பிடிப்பதையும் வழக்கமாக்கி கொள்வது நல்லது என்றனா்.
எல்லையோர மாவட்டங்கள்: இதனிடையே, கேரளத்தில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதாலும், உயிரிழப்புகள் பதிவாகி வருவதாலும் அதையொட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதார ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா். மருத்துவ முகாம்கள் அமைத்து அறிகுறிகளுடன் வருவோரை தனிமைப்படுத்தி பரிசோதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனா்.