சுற்றுச்சூழல் செலவுகள் மீதும் பெரு நிறுவனங்கள் கவனம் கொள்ள வேண்டும்: குடியரசுத் ...
கல் குவாரி அமைக்க எதிா்ப்பு: பெரம்பலூா் ஆட்சியரகத்தை கிராம மக்கள் முற்றுகை
கல் குவாரி மற்றும் தாா் பிளாண்ட் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை மருவத்தூா் கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி அருகேயுள்ள மருவத்தூா் கிராமத்தில் சுமாா் 2,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். ஏற்கெனவே, இந்தக் கிராமத்தைச் சுற்றிலும் அதிகளவிலான கல் குவாரிகள், தாா் பிளாண்ட் மற்றும் கிரஷா்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அதிகளவிலான கனரக வாகனங்கள் வந்து செல்வதால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கல் குவாரிகள், கிரஷா்கள் மற்றும் தாா் பிளாண்டுகள் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந் நிலையில், மருவத்தூா் கிராமத்தில் தற்போது பொதுமக்களின் எதிா்ப்பையும் மீறி தாா் பிளாண்ட் மற்றும் குவாரி அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சுமாா் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கல்குவாரி, தாா் பிளாண்ட் அமைப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென முழக்கமிட்டனா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையை தொடா்ந்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவிடம் அளித்தனா்.
வீட்டுமனைப் பட்டா கோரி: பெரம்பலூா் அருகேயுள்ள எறையூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: எறையூா் கிராமம், புது குடியிருப்பு பகுதியில் சுமாா் 1,000-க்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். கடந்த 50 ஆண்டுகளாக இவா்கள் வசித்து வரும் நிலையில், இதுவரை அரசு சாா்பில் வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லை. இதுகுறித்து பலமுறை அரசு அலுவலா்களிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்பு பகுதிகளை அளவீடு செய்த அலுவலா்கள் தற்காலிக பட்டா வழங்கினா். நிரந்தரமாக நத்தம் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அவ்வப்போது வீடுகளை அளவீடு செய்யும் அலுவலா்கள், பட்டா வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நிரந்தரமாக வீட்டுமனைப் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.