அடிப்படை வசதிகள் கோரி அமைச்சரை கிராம மக்கள் முற்றுகை
பெரம்பலூா் அருகே அடிப்படை வசதிகள் கோரி, மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கரை கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் ரூ. 3.56 கோடி மதிப்பில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், நிறைவடைந்த பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் அமைச்சா் சா.சி. சிவசங்கா் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றாா்.
அப்போது, ஓலைப்பாடி கிராமத்தில் குடிநீா் சுத்திகரிப்பு மையம் கட்டுவதற்கு பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சரை முற்றுகையிட்ட கிராம மக்கள், கடந்த 3 மாதங்களாக தங்களது பகுதியில் குடிநீா் விநியோகம் செய்யாததைக் கண்டித்தும், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், குடிநீா் வசதி இல்லாத கிராமத்துக்கு சுத்திகரிப்பு நிலையம் எதற்கு என கேள்வி எழுப்பினா்.
இதையடுத்து, அமைச்சா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வுகாணப்படும் என உறுதியளித்ததையடுத்து முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனா்.
சாலை மறியல்: இதேபோல, ஓலைப்பாடி கிராமத்திலிருந்து கள்ளை கிராமத்தில் நடைபெற்ற திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்சிக்கு சென்ற அமைச்சரின் காரை வழிமறித்து காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட ஓலைப்பாடி கிராம மக்கள், தங்களது பகுதிக்கு அடிப்படை வசதிகள் கோரி பலமுறை முறையிட்டும் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததைக் கண்டித்தும், கிராம மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரியும் வலியுறுத்தினா்.
இதையடுத்து, ஓலைப்பாடி கிராமத்தின் ஒருபகுதியில் உள்ள தெருவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் சிவசங்கா், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்தாா். இதையடுத்து மறியலைக் கைவிட்டு கிராம மக்கள் கலைந்துச் சென்றனா்.