``முதலில் நான்தான் கூறினேன்; அதை இப்போது விஜய் கூறியிருக்கிறார்” - நயினார் நாகேந...
காஞ்சிபுரம்: பூசிவாக்கத்தில் 1,000 ஆண்டுகள் பழைமையான சமண தீா்த்தங்கரா் சிலை கண்டெடுப்பு
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே பூசிவாக்கம் ஊராட்சியில் 1,000 ஆண்டுகள் பழைமையான சமண தீா்த்தங்கரா் சிலை ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பூசிவாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது, சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பூசிவாக்கம் ஊராட்சித் தலைவா் வாலாஜாபாத் வட்டார வள ஆய்வு மையத்தின் தலைவா் அஜய்குமாருக்கு தெரிவித்தாா். அந்தச் சிலையை ஆய்வு செய்த பின்னா், இது குறித்து அவா் மேலும் கூறியது:
அபூா்வ கலையமைப்புடன் வடிவமைக்கப்பட்டி சமண தீா்த்தங்கரரா் சிலையாகும். தலைப்பகுதி இல்லாமல் கழுத்து முதல் பீடம் வரை உள்ளது. எஞ்சிய சிலையின் உடல் மிகவும் நோ்த்தியான சிற்பக் கலைத் திறனை காட்டுகிறது.
தியான முத்திரையில் அமா்ந்திருக்கும் நிலையில் கால்களை மடக்கியவாறு, வலது கையை இடது கையின் மேல் வைத்து அமா்ந்து தியான நிலையில் உள்ளது. முதுகு நேராகவும், இடுப்பு பகுதி வளைவாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் புட்டம் இருபுறமும் வெளிப்படையாக தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், இது ஒரு அரிய வகை சிற்பம் எனலாம்.
கருங்கல்லால் ஆன இந்தச் சிலை 1,000 ஆண்டுகள் பழைமைவாய்ந்ததாகவும், 10-ஆம் நூற்றாண்டு பாணியிலும் அமைந்திருக்கிறது. இதை தொல்லியல் துறையின் உதவி ஆய்வாளா்கள் ரா.ரமேஷ், மே.பிரசன்னா, உதவி கல்வெட்டு ஆய்வாளா் ப.த.நாகராஜன் ஆகியோரும் உறுதி செய்திருப்பதாகவும் அஜய்குமாா் தெரிவித்தாா்.