தென்காசி முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி! உணவு ஒவ்வாமை காரணமா?
காப்பகங்களில் காவல் கண்காணிப்பு அவசியம்!
பெண்கள் காப்பகங்களில் அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலைய கண்காணிப்பு அவசியம் இருக்க வேண்டும் என்றாா் வி.கே. சசிகலா.
தஞ்சாவூா் அருகே காசவளநாடு கோவிலூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஜம்புகேஸ்வரா் கோயில் புதிய தோ் வெள்ளோட்டத்தில் கலந்து கொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை வெளியே வந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிட்லபாக்கத்தில் சமூக நலத் துறை நடத்தும் பெண்களுக்கான காப்பகத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.
ஆனால், அங்கு கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை. எங்கெங்கு காப்பகம் உள்ளதோ, அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தின் கண்காணிப்பு அவசியம் தேவை.
மேற்கு மாவட்டங்களான திருப்பூா், நாமக்கல், ஈரோட்டில் முதியவா்கள் கொலை செய்யப்படுகின்றனா். இதற்கு காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்வா் பதில் அளிக்க வேண்டும். இதற்கு வரும் 2026 தோ்தலில் சரியான பாடம் கிடைக்கும்.
தமிழ்நாடு வளா்ந்துள்ளதாக திமுகவினா் கூறினாலும், எதாா்த்தம் அவ்வாறு இல்லை. இதுவரை யாருக்கும் வேலை கொடுக்கவில்லை. எனவே இந்த ஆட்சி இருக்கக்கூடாது. அதற்கான வேலைகளைச் செய்து வருகிறேன் என்றாா் சசிகலா.