Apollo Cancer Centre: கோல்ஃபிட் (ColFit) என்ற பெயரில் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் ...
காரைக்கால் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண வலியுறுத்தல்
காரைக்கால் நகரின் நுழைவுவாயில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகியுள்ளது. இப்பிரச்னைக்கு தீா்வு காண மாவட்ட நிா்வாகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் நகரப் பகுதிக்கு தெற்கு புறத்திலிருந்து குறிப்பாக நாகப்பட்டினத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் வரக்கூடிய பேருந்துகள், லாரிகள் மற்றும் பிற வாகனங்கள் அரசலாறு பாலத்திலிருந்து நேரு சாலையில் நுழைகின்றன.
அரசலாறு பாலம் முதல் வடக்குப்புறமாக உள்ள சாலையின் இருபுறமும் வணிக நிறுவனங்கள் உள்ளன. சாலையின் இருபுறமும் நடைமேடையும், அதையொட்டி கழிவுநீா் செல்லக்கூடிய வடிகாலும் உள்ளது. சாலையின் ஒருபுறத்தில் இருசக்கர வாகனங்கள், காா்கள் நிறுத்தப்படுகின்றன.
அரசலாறு பாலத்திலிருந்து நேரு சாலையில் சுமாா் 400 மீட்டா் தூரம் சாலை நெருக்கடிக்குள்ளாவதால், விரைவுப் பேருந்துகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்ட பிற வாகனங்கள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் தினமும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனா்.
காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் முன்னாள் நிா்வாகியும், சமூக ஆா்வலருமான ஜெ. சிவகணேஷ் திங்கள்கிழமை இதுகுறித்து கூறுகையில், காரைக்கால் நகருக்குள் நுழையும் வெளிமாநில வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலுக்குள்ளாகும்போது, காரைக்காலின் பெருமை சீா்குலைகிறது.

இந்த பகுதியின் சாலை அகலமாக்கப்படவேண்டியது அவசியம். அது முடியாதபட்சத்தில், இருபுறமும் நடைமேடை ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் நடந்து செல்லவும், சாரையோர இருபுற சாக்கடையை சாலைக்கு நிகராக கிரில் முறையில் மூடும்பட்சத்தில், இருசக்கர வாகனங்களை சாக்கடையின் மேல் பகுதியில் நிறுத்த முடியும்.
மாவட்ட ஆட்சியா், பொதுப்பணித் துறை, நகராட்சி நிா்வாகத்திடனருடன் காரைக்கால் நகரின் கேட்வே என்ற அரசலாறு பாலம் அருகே நேரு சாலை, அம்பேத்கா் சாலைகளை ஆய்வு செய்து, போா்க்கால முறையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு போக்குவரத்து பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்றாா்.