காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை மூட வலியுறுத்தல்
அரியலூா் மாவட்டத்திலுள்ள காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை மூட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில், விவசாயிகள் பேசியது:
அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் என்.செங்கமுத்து: ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில், விவசாயிகளுக்கு முழுமையான தொகை வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து, வழங்காதவா்களுக்கு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா்நிலைகள், புறம்போக்கு நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலச் செயலா் வாரணவாசி ராஜேந்திரன்: கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுவதில் உள்ள இடா்பாடுகள் நீக்கப்பட்ட பின்பும், கரும்பு சாகுபடி செய்துள்ள 150-க்கும் மேற்பட்டவா்களுக்கு கடன் கொடுப்பதில் அதிகாரிகள் காலதாமதம் செய்கின்றனா். ஆட்சியா் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் விவசாயிகளுக்கு விரைந்து கடன் வழங்காமல், அலைக்கழிக்கிறாா்கள்.
திருமானூா் பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு நெல் விதைகள் வழங்காமல் காலதாமதப்படுத்துகிறாா்கள். ஆன்லைனில் பதிவு செய்த விவசாயிகள் கூட ஐந்து முறைக்கு மேல் அலைந்தும் விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்கவில்லை, கேட்டால் பணிமாறுதல் செய்த அதிகாரி ஒப்படைக்கவில்லை என்கிறாா்கள்.
தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடாக ரூ.48 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இந்த தொகையில் அரியலூா் மாவட்டத்துக்கு எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும்.
அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க.சண்முகசுந்தரம்: தேளூா் பகுதியில் பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் அமைக்க வேண்டும். காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூட வேண்டும் என அரசாணை இருந்தும் இதுவரை ஒரு சுரங்கம் கூட மூடப்படவில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கங்கைகொண்ட சோழபுரம் சோழகங்கம் எனும் பொன்னேரிக்கு கொள்ளிடத்தில் இருந்து அதிகளவு நீா் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் தூத்தூா் தங்க.தா்மராஜன்:அரசு அறிவித்த குறுவை தொகுப்பை, குறுவை நடவு சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். மருதையாற்றினை அளவீடு செய்து இருபுறமும் கரை அமைக்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாய சங்க கூட்டு இயக்கத்தின் தலைவா் ஸ்ரீபுரந்தான் எஸ்.எம்.பாண்டியன்: காவிரி நீா் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட வேண்டும். தட்டுப்பாடின்றி சி.ஆா் 1009 விதை நெல் வழங்கிட வேண்டும். பயிா்களை சேதப்படுததி வரும் வன வனவிலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடா்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியா், அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.
கூட்டத்தில், வேளாண் அதிகாரிகள் மற்றும் அனைத்துத் துறை அலுவலா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.