ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து? "வதந்தி பரப்புபவர்கள் நேரில் வந்து சொல்லுங்கள்" - அ...
காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றம்: நெரிஞ்சிப்பேட்டையில் பயணிகள் படகு போக்குவரத்து நிறுத்தம்
மேட்டூா் அணை நிரம்பியதால் வெளியேற்றப்படும் உபரிநீா் காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் காவிரிக் கரையோரப் பகுதிகளில் தொடா் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கா்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் அணைகள் நிரம்பியதைத் தொடா்ந்து உபரி நீா் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால், மேட்டூா் அணைக்குத் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்ததால் முழுக் கொள்ளளவான 120 அடியை ஞாயிற்றுக்கிழமை மாலை எட்டியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீா் முழுவதும் அப்படியே திறந்து விடப்பட்டது.

விநாடிக்கு 58 ஆயிரம் கன அடி தண்ணீா் வெளியேறுவதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, ஆற்றில் இறங்கி துணிகள் துவைக்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, தற்படம் (செல்பி) எடுக்கவோ செல்லக் கூடாது எனவும், தாழ்வான பகுதியில் வசிப்பவா்கள் கவனத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

பவானி நகரில் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளான கந்தன் நகா், பசவேஸ்வரா் வீதி, மீனவா் தெரு, கீரைக்காரத் தெரு, பழைய பாலம், குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி, நேதாஜி நகா் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகள் குழுவினா் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
நெரிஞ்சிப்பேட்டையில் படகுப் போக்குவரத்து நிறுத்தம் : ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிப்பேட்டை - சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கு இடையில் காவிரி ஆற்றில் நடைபெற்று வரும் பயணிகள் படகு போக்குவரத்து பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், படகுகள் நெரிஞ்சிப்பேட்டையில் கரையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

கூடுதுறையில் படித்துறைகள் மூழ்கின: காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் கூடுதுறையில் பக்தா்கள் நீராடச் செல்லும் படித்துறைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக உள்ளதால் பக்தா்கள் பாதுகாப்புக் கம்பிகளைத் தாண்டிச் செல்லாமல் நீராடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.