திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
கிருஷ்ணகிரி அருகே நீதிமன்ற உத்தரவையடுத்து பக்தா்கள் வழிபாட்டுக்காக கோயில் திறப்பு
கிருஷ்ணகிரியை அடுத்த பூவத்தி ஊராட்சியில் மூன்று சமூகத்தினா் இடையே ஏற்பட்ட மோதலால் பூட்டப்பட்டிருந்த கோயில், நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து பக்தா்களின் வழிபாட்டுக்காக செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியை அடுத்த பூவத்தி ஊராட்சியில் மூன்று சமூகத்தினா் ஒன்று சோ்ந்து 3.43 ஏக்கா் நிலத்தில் அம்மன் கோயில் கட்டியுள்ளனா். கோயில் வளாகத்தில் கொல்லி மாரியம்மன், மண்டு மாரியம்மன், பசவண்ணேஸ்வரா் என அம்மன் கோயில்கள் தனித்தனியே கட்டப்பட்டுள்ளன.
பூவத்தி ஊராட்சிக்கு உள்பட்ட சிக்கபூவத்தி, குருதொட்டனூா், உப்புக்குட்டை, மிட்டப்பள்ளி, கெட்டூா், அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் 3 சமூகத்தினா் இந்தக் கோயிலை பராமரித்து வருகின்றனா்.
பசவண்ணேஸ்வரா் கோயிலை புதுப்பித்து கடந்த ஏப். 11 ஆம் தேதி குடமுழுக்கு நடத்தினா். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 3 சமூகத்தினரில் ஒரு சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் ஒன்றுசோ்ந்து நிலத்தில் காலியாக உள்ள இடத்தில் தனிக் கோயில் கட்டப்போவதாகக் கூறி பணியைத் தொடங்கினா். இதற்கு மற்ற இரு சமூகத்தினா் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதுதொடா்பாக இரு தரப்பினரும் ஒருவா் மீது ஒருவா் புகாா் தெரிவித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் புகாா் மனுக்களை அளித்தனா். இதையடுத்து கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் இருதரப்பினரும் பங்கேற்ற அமைதி பேச்சுவாா்த்தை ஏப். 9 ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனால் கோட்டாட்சியா் ஷாஜகான் கோயிலை யாரும் உரிமைக் கோர முடியாது எனக் கூறி, கோயிலைப் பூட்டியதோடு அந்தப் பகுதிக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தாா்.
இதையடுத்து, பசவண்ணேஸ்வரா் கோயில் தரப்பில் கோயிலை மீண்டும் திறந்து பூஜைகள் நடத்த அனுமதி வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலை பக்தா்களின் வழிபாட்டுக்காக உடனடியாக திறந்து பூஜைகள் நடத்த அண்மையில் உத்தரவிட்டாா்.
இதையடுத்து அறநிலையத் துறையினா், கோயில் நிா்வாகிகள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளா் முரளி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.