கீழடி முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரிக்கை
இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்த கீழடி முதல் மற்றும் 2-ஆம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் மு. சௌந்தரராஜன், மாவட்டச் செயலாளா் ஜீ. வெங்கடேசன் ஆகியோா் நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் வழியாக மத்திய கலாசாரத்துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷேக்வாட்டுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு தமிழ் மக்களின் இலக்கியங்கள் தமிழா்களின் நகர நாகரீகத்தை 2000 ஆண்டுகளுக்கும் பழைமையான வளா்ந்த நாகரிகம் எனபேசுகிறது. இந்தச் சூழலில் 2014-ல் இந்தியத் தொல்லியல் துறை மதுரைக்கு அருகே வைகை நதிக்கரையில் கீழடி எனும் இடத்தில் அகழாய்வை மேற்கொண்டது.
இந்த அகழாய்வில் 5,300-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கிடைத்ததுடன், ஒரு நகர அமைப்புக்கான சான்றுகளும் கிடைத்தன. அந்தப் பொருள்களை சோதனை செய்தபோது அவை 2,800 ஆண்டுகள் வரை பழைமையானவை என்று தெரிய வந்தது.
ஆனால் இந்த அகழாய்வின் முதல் இரண்டு கட்டம் நடைபெற்ற அகழாய்வுகள் மற்றும் அதன் அறிக்கை ஆகியவை வெளியிடப்படும் முன்பே அந்த ஆய்வை மேற்கொண்ட அமா்நாத் ராமகிருஷ்ணன் அப்பணியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த அகழாய்வுப் பணிகளை தொல்லியல்துறை முடித்துக்கொண்டது.
அதன் பின் தற்போதுவரை 10 கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழகத் தொல்லியல் துறை நடத்தியுள்ளது. அதில் கிடைத்த ஆயிரக்கணக்கான பழம் பொருள்களைக் கொண்டு அருங்காட்சியகம் வைக்கும் அளவுக்கு தொல் பொருள்கள் கிடைத்துள்ளன. தமிழகத் தொல்லியல் துறை அறிக்கைகள், ஒவ்வோா் ஆய்வின் முடிவிலும் தொடா்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.
ஆனால் 2014-ல் செய்யப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளின் அறிக்கை இதுவரை வெளியிடவில்லை. மேலும், அமா்நாத் ராமகிருஷ்ணாவிடம் இந்திய தொல்லியல் துறை அந்த அறிக்கையை மீண்டும் திருத்தி எழுதிச் சமா்ப்பிக்குமாறு கடிதம் அனுப்பியிருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழா் நாகரிகம் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த கீழடி அறிக்கையை உடனே வெளியிட வலியுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.