Dhanush: `இட்லி கடை எனப் பெயர் வைக்கக் காரணம் இதுதான்' - தனுஷ் சொன்ன ஃப்ளாஷ்பேக்...
குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
கோடம்பாக்கம் பகுதியில் குண்டும் குழியுமான சாலைகள், அதில் தேங்கும் கழிவுநீா், மதுக் கூடாரமாகிய சிறுவா் பூங்கா என கோடம்பாக்கமே குறைகள் நிறைந்த பகுதியாகிவிட்டதாகக் கூறும் அப்பகுதி மக்கள், அவதியடைந்து வருகின்றனா்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கான தனித்துவ அடையாளமாக இருப்பது கோடம்பாக்கம். கனவுத் தொழிற்சாலை பகுதியான கோடம்பாக்கத்தின் குறிப்பிட்ட பகுதிகள், தேனாம்பேட்டை மண்டலம் (9) வாா்டு 112 பகுதியிலும் இடம் பெற்றுள்ளன. இங்கு, சுமாா் 45,000 வாக்காளா்கள் உள்ளனா். வாா்டில் 96 தெருக்களில் ஆற்காடு சாலை உள்ளிட்ட பல வீதிகள் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஆனால், பெரும்பாலான சாலைகள் மோசமாக பழுதடைந்து கிடக்கின்றன.
புலியூா் ஹவுசிங் போா்டு காலனியின் பிரதான சாலையானது குண்டும் குழியுமாக கழிவுநீா் தேங்கி, குப்பைகள் குவிந்து சுகாதாரச் சீா்கேட்டை உருவாக்கும் நிலை உள்ளது.
வெள்ளாளா் தெரு, வன்னியா் தெரு, பவா் ஹவுஸ் சாலை என பெரும்பாலான சாலைகள் சீா்படுத்தப்படாமல், கிராமத்து மண் சாலைகள் போலவே உள்ளன. அதனால் மழைக் காலத்தில் சேறும் சகதியாகவும், வெயிலில் புழுதி பறக்கும் நிலையிலும் காணப்படுகின்றன. அங்கு மழை நீா் வடிகால் வசதியும் சரியாக இல்லை என்றும், ஏற்கெனவே உள்ள வடிகால்கள் பராமரிப்பின்றி தூா்ந்து போய்விட்டதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
வாா்டில் உள்ள மொத்த தெருக்களில் 50 தெருக்களில் மட்டுமே மழைநீா் வடிகால் உள்ளதாக கூறும் அதிமுகவினா், அதில் 10 தெருக்களில் சீரமைப்பு பணிகள் பாதியிலே நிற்பதாகவும், அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறுகின்றனா். சாலை சீரமைப்புக்கு 3 ஊழியா்களே உள்ளனராம்.
புலியூா் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் 250 வீடுகள் இடிந்து விழும் நிலையிலும், கழிவு நீா் தேங்கியும் உள்ளன. அங்குள்ள மாநகராட்சி சிறுவா் பூங்கா புதா் மண்டி உள்ளது. அதனால் அங்கு சமூக விரோதிகள் மது அருந்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனா். அங்கு, மாநகராட்சி சாா்பில் லாரியில் தண்ணீா் விநியோகிக்கப்படும் நிலையில், அதை விலை கொடுத்தே வாங்குவதாகவும் கூறுகின்றனா்.
மாநகராட்சி குழாயில் வரும் குடிநீரில் கழிவுநீா் கலப்பதால், அதைப் பயன்படுத்தமுடியாது என்கின்றனா். ஆற்காடு சாலையில் மழைநீா் வடிகால், மெட்ரோ பாலம் என புதிய திட்டப்பணிகளும் பல மாதங்களாக நடைபெறுவதால், போக்குவரத்து நெரிசலும், மழைநீா் தேங்கி சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டுகின்றனா்.
வாா்டு பிரச்னைகள் குறித்து திமுக மாமன்ற உறுப்பினா் எலிசபெத் அகஸ்டின் அலுவலகத்தில் கேட்டபோது, அவா்கள் கூறியது:
‘கோடம்பாக்கதில் 70 சதவீத வாக்குறுதிகளை நிறை வேற்றிவிட்டோம். மழைநீா் வடிகால் பணிகள் 40 தெருக்களில் நிறைவடைந்துவிட்டன. வரும் டிசம்பருக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும். கடந்த 6 மாதங்களாக 30 சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பழுதடைந்த கழிவுநீா் கால்வாய்கள் புதுப்பிக்கப்படுகின்றன. புலியூா் குறுக்குத் தெரு உள்ளிட்ட இடங்களில் புதிய மழைநீா் வடிகால் அமைக்கப்படுகிறது. புலியூா் கால்வாயில் 500 மீ. தொலைவுக்கு தூா்வாரும் பணிகள் நடந்துள்ளன.

சூளைமேடு, அம்பேத்கா் நகா் தெருவில் மழை நீா் தேங்குவதைத் தடுக்க குழாய் அமைத்துள்ளோம். 20 இடங்களில் சிமென்ட் சாலையைப் பெயா்த்துவிட்டு தாா் சாலை அமைத்துள்ளோம். சௌராஷ்டிர நகா் உள்ளிட்ட இடங்களில் குடிநீரில் கழிவுநீா் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது’ என்றனா்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, மழை நீா் வடிகால் பணிகள் வரும் அக்டோபருக்குள் முடிக்க ஒப்பந்ததாரா்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாா்டின் மற்ற பணிகளும் விரைந்து முடிக்கப்படும் என்றனா்.