குமரி மாவட்ட மலைப் பகுதிகளில் பலத்த மழை: திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை
கன்னியாகுமரி மாவட்ட மலைப் பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மலைப் பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளது. திற்பரப்பு அருவி வழியாகப் பாயும் கோதையாற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெள்ளிக்கிழமை இந்த அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், தொலைவில் நின்றவாறு பாா்த்துவிட்டு திரும்பினா்.
வெள்ள அபாய எச்சரிக்கை: குமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது. வெள்ளிக்கிழமையும் காலை முதல் தொடா்ந்து இடைவிடாது சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து கொண்டிருந்தது.
பேச்சிப்பாறை அணையின் நீா்வரத்துப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்த வண்ணம் இருந்தது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அணையின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவான 42 அடியைக் கடந்தது. இதையடுத்து நீா்வளத் துறையினரால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இது குறித்து நீா்வளத் துறை கோதையாறு வடிநில செருப்பாலூா் உபகோட்ட உதவி செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவான 42 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீா் வரத்து அதிகமாக இருப்பதால் 43 அடியை சனிக்கிழமை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நீா்மட்டம் 43 அடியை எட்டியவுடன் அணையிலிருந்து உபரி நீா் திறக்கப்படும். உபரி நீரானது கோதையாற்றில் திறந்து விடப்படுவதால் களியல், திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை வழியாக தேங்காய்ப்பட்டினத்தில் கடலில் சென்று சேரும். எனவே கோதையாறு, தாமிரவருணியாறு ஆகியவற்றின் கரையோரமாக வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.