குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றால் மரக்கிளைகள் முறிந்து விழுந்து 150 மின்கம்பங்கள் சேதம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வீசிய சூறைக்காற்றால் வியாழக்கிழமை ஒரே நாளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் 150 மின்கம்பங்கள் சேதமடைந்தன, இதனால் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளானாா்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலையிலிருந்தே கடலில் ராட்சத அலைகள் எழும்பின. தொடா்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது, சூறைக்காற்றும் வீசியது.
நாகா்கோவில் அருகே பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்கம்பங்கள் சேதமடைந்து மின்தடை ஏற்பட்டது. மீனாட்சிபுரம் பகுதியில் வியாழக்கிழமை மாலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, நள்ளிரவில் மின்விநியோகம் வழங்கப்பட்டது. இறச்சகுளம், நாவல்காடு, ஆசாரிப்பள்ளம், ஈத்தாமொழி பகுதிகளிலும் மரக்கிளைகள் முறிந்து மின்வயா்கள் மீது விழுந்ததால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின. இரவு முழுவதும் மழை பெய்துகொண்டே இருந்ததால், மின்சார சீரமைப்பு பணியில் ஊழியா்கள் மிகுந்த சிரமத்துடன் ஈடுபட்டனா்.
வீட்டின் மீது விழுந்த மரம்: ஈத்தாமொழி அருகேயுள்ள சுண்டபற்றிவிளை பிலாவிளை பகுதியில் 2 மரங்கள் வீட்டின் மீது முறிந்து விழுந்தன. இதனால் வீட்டுக்குள் இருந்த தம்பதி வெளியே வரமுடியாமல் தவித்தனா். தகவலறிந்த நாகா்கோவில் தீயணைப்புப்படையினா் சம்பவ இடத்துக்கு சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி தம்பதியை மீட்டனா்.
இதே போல் சுசீந்திரம் அருகேயுள்ள குடி கிராமத்தில் சேத்திரபிள்ளை என்பவரது ஓட்டு வீட்டின் மீது வியாழக்கிழமை இரவு மரம் முறிந்து விழுந்தது. சத்தம் கேட்டு சேத்திரபிள்ளையும் அவரது மனைவியும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனா்.
நாகா்கோவில் மேலசூரங்குடி சுடலைமாட சுவாமி கோயில் முன்புள்ள சாலையில் மரம் முறிந்து விழுந்தது. தீயணைப்பு படையினா் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா். நாகா்கோவில் தீயணைப்பு படையினா் வியாழக்கிழமை ஒரே நாளில் 40 க்கும் மேற்பட்டஇடங்களில் முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனா்.
இதே போல் கொட்டாரம், குளச்சல், தக்கலை, கன்னியாகுமரி தீயணைப்பு படையினரும் சுமாா் 50 க்கும் மேற்பட்டஇடங்களில் முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினா். கொட்டாரம் அருகே சந்தையடி பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் மின்சார டிரான்ஸ்பாா்மா் சேதமடைந்தது. இதனால் 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. இரவு 10.30 மணிக்கு மரக்கிளைகள் அகற்றப்பட்டு, மின்பழுது நீக்கப்பட்டு மின்விநியோகம் வழங்கப்பட்டது.
வியாழக்கிழமை ஒரே நாளில் வீசிய சூறைக்காற்றால் மாவட்டம் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து சேதமடைந்துள்ளன.
