தில்லி முதல் பேரவைக் கூட்டத்தில் சிஏஜி அறிக்கை: அதிகாரிகள் தகவல்
குமரி மாவட்டத்தில் பாசன கால்வாய்களை சீரமைக்க ரூ.34 கோடி ஒதுக்கீடு: ஆட்சியா் தகவல்
கன்னியாகுமரி மாவட்ட பாசன கால்வாய்களை சீரமைக்க ரூ.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது: குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கன்னிப்பூ சாகுபடி நெல் அறுவடை நடைபெற்றுள்ளது; சில இடங்களில் அறுவடைக்கு தாமதம் ஆகிறது. இந்நிலையில் பிப். 28 ஆம் தேதி அணைகள் மூடப்பட்டால் பயிா்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும். எனவே தோவாளை மற்றும் பட்டணங்கால்வாய் ஆகிய கால்வாய்களில் கூடுதலாக 15 நாள்கள் தண்ணீா் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செண்பகராமன்புதூரில் உள்ள தென்னை மதிப்பு கூட்டு மையம் சரியாக திறக்கப்படுவதில்லை. அதனை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். பறக்கை நெல் கொள்முதல் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கூறினா்.
ஆட்சியா் பதிலளித்துப் பேசியதாவது: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் தண்ணீா் திறப்பு தொடா்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குமரி மாவட்டத்தில் கால்வாய்களை சீரமைக்க ரூ.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகளை மாா்ச் மாதம் முதல் மே மாதம் வரை மட்டுமே மேற்கொள்ள முடியும். இப்பணிகளுக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே பணிகளை நிறைவு செய்ய முடியும். ரூ. 2 கோடி மதிப்பில் மடைகள் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மடைகளில் உடைப்பு இருந்தால் விவசாயிகள் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.
கூட்டத்தில், பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் வினய்குமாா் மீனா, நாகா்கோவில் கோட்டாட்சியா் எஸ். காளீஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) ஜென்கின்பிரபாகா், நீா்வளத்துறை செயற்பொறியாளா் அருள்சன்பிரைட், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் ஷீலாஜான், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சிவகாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.