திருநெல்வேலி நூலகத்திற்கு 'காயிதே மில்லத்' பெயர்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
குருப்பெயர்ச்சி பலன்கள் - 2025: கடகம்
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
உங்களின் அயன, சயன, மோட்ச ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் குரு பகவானின் சஞ்சாரத்தினால் உங்கள் காரியங்களை பெரிய அலைச்சல் இல்லாமல் சிறிது தாமதத்துடன் முடித்துவிடுவீர்கள். பொருளாதாரம் சீராக இருந்தாலும் சில அனாவசிய செலவுகளை செய்ய நேரிடும். மற்றபடி உற்றார், உறவினர்களுடன் ஏற்பட்ட மனக் கசப்புகள் மறைந்து குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நெடுநாட்களாக இழுத்துக்கொண்டிருந்த வழக்கு விவகாரங்கள் முடிவுக்கு வரும். உங்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேறும். திடமாக சிந்தித்து தீர்க்கமான முடிவுகளை எடுப்பீர்கள். கடினமாக உழைத்து போட்டிகளையும், எதிர்ப்பாளர்களையும் தகர்த்தெறிவீர்கள்.
அதேநேரம் செய்தொழிலை விரிவுபடுத்தும் எண்ணத்தைத் தள்ளி வைக்கவும். அனாவசிய கடன் வாங்கி புதிய முயற்சிகள் எதையும் செயல்படுத்த வேண்டாம். குரு பகவானின் சயன ஸ்தான சஞ்சாரத்தினால் நிம்மதியாக உறங்குவீர்கள். ஆனாலும் எவருக்கும் வாக்கு கொடுப்பதோ முன் ஜாமீன் போடுவதோ கூடாது. உங்கள் பெயரில் எவருக்கும் கடன் வாங்கித் தர வேண்டாம். குரு பகவானின் பார்வை உங்களின் சுகஸ்தானமான நான்காம் ராசியின் மீது படிகிறது. இதனால் குடும்பத்தில் நிம்மதி நிலவும். தாய் வழியிலிருந்து நன்மைகள் கிடைக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். புதிய வீட்டிற்கு மாற நினைப்பவர்கள் இந்த ஆண்டு அதை செயல்படுத்தலாம்.
குரு பகவான் தன் சப்தம பார்வையினால் உங்களின் ஆறாம் ராசியினைப் பார்வை செய்கிறார். இதனால் வெளியில் கொடுத்திருந்த கடன் உடனடியாகத் திரும்பக் கிடைக்கும். அசையாச் சொத்துக்களில் இருந்த வில்லங்கம் தீரும். மனம் தெளிவுடன் காணப்படும்.
உங்களின் எட்டாம் ராசியைப் பார்வை செய்யும் குரு பகவான் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளைத் தேடித் தருவார். முன்பின் அறியாதவர்களும் உதவி செய்வார்கள். களவு போனதாக நினைத்துக்கொண்டிருந்த பொருட்கள் திடீரென்று உங்கள் கைக்கு கிடைக்கும். எவரிடமும் முன் கோபம் கொண்டு அவசியமில்லாத வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு
அலுவலக வேலைகளை முன்கூட்டியே செய்து முடிப்பீர்கள். சில நேரங்களில் சில இடையூறுகளை சந்திக்க நேரிடும். மற்றபடி பண வரவுக்குத் தடைகள் வராது. மேலதிகாரிகளின் ஆதரவு சுமாராக இருப்பதால் கவனமாக நடந்துகொள்ளவும்.
வியாபாரிகளுக்கு
பொருளாதாரம் நன்றாக இருக்கும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாகவே முடிவடையும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். தேவையில்லாத சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். கூட்டாளிகளால் உங்களின் வேலைப் பளு குறையும்.
விவசாயிகளுக்கு
விளைச்சல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும் முதலுக்கு மோசம் போகாது. நீர்ப்பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். கால்நடைகளால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். விவசாய உபகரணங்களை வாங்கி எதிர்கால வளத்திற்கு வித்திடுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு பொதுச் சேவையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும். மேலிடத்தின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். தொண்டர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.
கலைத்துறையினருக்கு
பெயரும், புகழும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். சுறுசுறுப்புடன் பணியாற்றி கடினமான வேலைகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்துவிடுவீர்கள்.
பெண்மணிகள்
அனுகூலமான நிலைமையைக் காண்பீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உற்றார், உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். பெரியோர்களின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு குழப்பமான சூழ்நிலைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
மாணவமணிகள்
மதிப்பெண்களைப் பெறுவதற்கு கடினமாக உழைக்க நேரிடும். இருப்பினும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவினால் படிப்பில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.
புனர்பூசம் - 4
நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. மாணவர்களுக்கு கேளிக்கையில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது தனிக்கவனம் செலுத்துவது நல்லது.
பூசம்
வெற்றிகளைக் குவித்து வாழ்வில் வசந்தம் வீசம். குடும்பத்தை சாராத ஒருவரால் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள்.
ஆயில்யம்
சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும்.
பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். முடிந்தவர்கள் ஸ்ரீசூரியனார் கோயில் சென்று வழிபட்டு வரலாம். காலையில் சூரியன் உதிக்கும் போது தரிசம் செய்வதும் நன்மையைத் தரும்.